பக்கம் - 103 -
2) நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது அவர்களுடைய பிடரியின் மீது உக்பா இப்னு அபூ முஈத் மிக அழுத்தமாக மிதித்தான். இதனால் நபி (ஸல்) அவர்களின் விழிகள் பிதுங்கிற்று!

நபி (ஸல்) அவர்களை அந்த வம்பர்கள் கொல்லவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தனர் என்பதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கும் சம்பவத்தை சான்றாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறுவதாவது:

குறைஷிகள் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, “இவர் விஷயத்தில் நாம் பொறுமை காத்ததுபோன்று வேறு எதற்கும் நாம் பொறுமை காத்ததில்லை. இவர் விஷயத்தில் நாம் எல்லைமீறி சகித்து விட்டோம்” என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டுவிட்டு தவாஃபை” தொடங்கினார்கள். கஅபாவைச் சுற்றி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கு அருகில் நடந்தபோது குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அதன் மாற்றத்தை நான் பார்த்தேன். இரண்டாவது முறையாக அவர்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் அவ்வாறே குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுவிட்டார்கள். “குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் (கொஞ்சம்) கேட்டுக் கொள்கிறீர்களா? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டு விடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (அதிவிரைவில் உங்களது கதை முடிந்து விடும்)” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டனர். தங்களுக்கு மிகப்பெரியஆபத்தொன்று நிச்சயம் நிகழும் என்பதை உணர்ந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்களிடத்தில் கொடூரமாக நடந்தவர் கூட நபி (ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் சாந்தப்படுத்தினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அறிவீனர் அல்லர்! அபுல் காசிமே நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, சாமாதானப்படுத்தினர்.

மறுநாளும் அவ்வாறே ஒன்று சேர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு நபி (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பிடித்து இழுத்தான். அவனிடமிருந்து நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றிய அபூபக்ர் (ரழி) “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். பிறகு அனைவரையும் அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இதுதான் நான் பார்த்ததில் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிய மிகக் கொடூரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) கூறுகிறார்கள்.