பக்கம் - 104 -
ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்:

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களிடம் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அரக்கத்தனமாக நடந்து கொண்டவற்றில் மிகக் கொயூரமான ஒன்றை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கவர் “நபி (ஸல்) அவர்கள் கஅபாவில் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் தொழுது கொண்டிருந்தபோது உக்பா இப்னு அபூமுஈத் அங்கு வந்து தனது மேலாடையை நபி (ஸல்) அவர்களின் கழுத்தில் போட்டு மிகக் கடினமாக இறுக்கினான். அபூபக்ர் (ரழி) விரைந்து வந்து அவனது புஜத்தைப் பிடித்துத் தள்ளி நபி (ஸல்) அவர்களை விட்டும் அவனை விலக்கிவிட்டு “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

இச்சம்பவத்தை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களை உக்பா இவ்வாறு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தபோது உங்கள் தோழரை காப்பாற்றுங்கள் என்று ஒருவர் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து கூறினார். அபூபக்ர் (ரழி) எங்களைவிட்டு வேகமாகப் புறப்பட்டார்கள். அவர்கள் தங்களது தலையில் நான்கு சடை பின்னி இருந்தார்கள். “தனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கூறிக்கொண்டே சென்று, நபி (ஸல்) அவர்களை விடுவித்தார்கள். அம்மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு தங்களதுக் கோபத்தை அபூபக்ர் (ரழி) மீது திருப்பினர். நிராகரிப்பவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகிய பிறகு அபூபக்ர் (ரழி) எங்களிடம் திரும்பி வந்தார். அவருடைய சடையில் நாங்கள் எங்கு தொட்டாலும் அதிலிருந்து முடிகள் கையுடனேயே வந்துவிட்டன. (முக்தஸருஸ்ஸீரா)

ஹம்ஜா இஸ்லாமை தழுவதல்

அநியாயங்களும் கொடுமைகளும் நிறைந்து காணப்பட்ட அக்காலச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் பாதையை ஒளிமயமாக்கும் ஒரு மின்னல் வெட்டியது. அதுதான் ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சி. ஆம்! நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு இறுதியில் துல்ஹஜ் மாதத்தில் அவர்கள் இஸ்லாமைத் தழுவினார்கள்.

ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதற்குரிய காரணம்: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்தபோது அவ்வழியாக வந்த அபூ ஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை சுடும் வார்த்தைகளால் இம்சித்தான். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு எவ்வித பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தார்கள். பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி (ஸல்) அவர்களின் மண்டையில் அடித்து காயப்படுத்திவிட்டு கஅபாவிற்கு அருகில் அமர்ந்திருந்த குறைஷிகளின் சபையில் போய் அமர்ந்து கொண்டான். நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. ஸஃபா மலையில் இருந்த தனது வீட்டில் இருந்துகொண்டு இக்காட்சியை அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் அடிமைப் பெண் பார்த்து, வேட்டையிலிருந்து வில்லுடன் வந்து கொண்டிருந்த ஹம்ஜாவிடம் இச்சம்பவத்தைக் கூறினார். (ஹம்ஜா (ரழி) குறைஷிகளில் மிகவும் வலிமைமிக்க வாலிபராக இருந்தார்.) ஹம்ஜா (ரழி) சினம்கொண்டு எழுந்தார்.

அபூஜஹ்லை தேடி பள்ளிக்குள் நுழைந்து “ஏ கோழையே! எனது சகோதரன் மகனையா திட்டிக் காயப்படுத்தினாய்! நானும் அவரது மார்க்கத்தில்தான் இருக்கிறேன்” என்று கூறி தனது வில்லால் அவனது தலையில் அடித்து பெரும் காயத்தை ஏற்படுத்தினார். அபூஜஹ்லின் குடும்பமான பனூ மக்ஜுமில் உள்ள ஆண்கள் கொதித்தெழுந்தனர். ஹம்ஜாவிற்கு ஆதரவாக ஹாஷிம் கிளையார்களும் கொதித்தெழுந்தனர். இதனைக் கண்ட அபூஜஹ்ல் “அபூ உமாரா (ஹம்ஜா)வை விட்டுவிடுங்கள். நான் அவரது சகோதரனின் மகனை மிகக் கொச்சையாக ஏசி விட்டேன்” (அதுதான் என்னை அவர் தாக்குவதற்குக் காரணம்) என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)