பக்கம் - 109 -
இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அபூ அம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார். உமர் (ரழி) “நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்” என்று கூறினார். அதற்கு அவர் “அப்படி ஒருக்காலும் நடக்காது” என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு “இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்” என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் “அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்:

உமரிடம் “உங்களுக்கு “ஃபாரூக்’ என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்” என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு “அல் ஃபாரூக்“” எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்)

உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா)