பக்கம் - 118 -


தீய தீர்மானம்

மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர்களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர்கள் அனைவரும் “முஹஸ்ஸப்’ என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாரின் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர்மானங்களைப் போட்டனர்.

அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர்களுடன் அமர்வது, அவர்களுடன் பழகுவது, அவர்களது வீட்டுக்குச் செல்வது, அவர்களிடம் பேசுவது, அவர்களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார்களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர்கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் எழுதினர். இவ்வுடன்படிக்கையை “பகீழ் இப்னு ஆமிர் இப்னு ஹாஷிம்’ என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகரிப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் “அபூதாலிப் கணவாயில்’ ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.

“கணவாய் அபூதாலிபில்’ மூன்று ஆண்டுகள்

இக்காலக்கட்டத்தில் அவர்களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர்கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர். பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குரிய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர்களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர்களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர்த்தினர்.

சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதரி) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார். ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர் எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார்.

நபி (ஸல்) அவர்களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர்களைத் தனது விரிப்பில் தூங்கச் சொல்வார். அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் அல்லது தனது சிறிய, பெரியதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர்களைப் படுக்க வைத்த தனது விரிப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை வேறு விரிப்பில் படுக்கவைத்து விடுவார்கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர் யாராவது நபி (ஸல்) அவர்களைக் கண்காணித்தால், அவர்களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார்கள்.