பக்கம் - 120 -
காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர். ஜுஹைர் ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார். அவர் கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி “மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர்களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்” என்று கூறினார். பள்ளியின் ஓரத்தில் அமர்ந்திருந்த அபூஜஹ்ல் “நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது” என்றான். ஸம்ஆ, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பெரியபொய்யன். நீ இதை எழுதியபோதே அதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறினார். அபுல் புக்த “ஆம்! ஸம்ஆ உண்மையைத்தான் கூறுகிறார். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை” என்று கூறினார். முத்இம், “ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர்கள். இதைத் தவிர யார் என்ன கூறினாலும் அவர் பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார். இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் “இது இரவிலேயே பேசி முடிவு செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர் ஆலோசனை நடந்திருக்கிறது” என்று கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர்ந்து இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான் தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர்களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார்கள். அபூதாலிப் குறைஷிகளிடம் “எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர் உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்” என்று கூறினார். அதற்கவர்கள், “நிச்சயமாக நீர் ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர்” என்று கூறினர்.

அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை முடிந்தபோது முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார்த்தபோது “பிஸ்மிக்கல்லாஹும்ம’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், “அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.

பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்தவர்களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர். இணைவைப்பவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மிகப்பெரியஅத்தாட்சியைப் பார்த்தனர். ஆனால் அவர்களது இதயமோ...

அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, “இது சகஜமான சூனியம் தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 54:2)

என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணித்து இவர்கள் நிராகரிப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)