பக்கம் - 122 -
அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை அழைத்து வரச்செய்து “எனது சகோதரன் மகனே! இதோ இவர்கள் உனது கூட்டத்தில் சிறப்புமிக்கவர்கள். உனக்காகவே இங்கு ஒன்றுகூடி இருக்கிறார்கள். அவர்கள் உனக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். உன்னிடம் சில வாக்குறுதிகளைக் கேட்கிறார்கள். உங்களில் யாரும் எவருக்கும் இடையூறு தரக்கூடாது” என்று அவர்கள் கூறியதை அப்படியே கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் இவர்களுக்கு ஒரு சொல்லை முன்வைக்கிறேன். அதை இவர்கள் மொழிந்தால் இவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம். அரபி அல்லாதவர்களும் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: அபூதாலிபை நோக்கி “நான் இவர்களை ஒரே வார்த்தையில் இணைக்க விரும்புகிறேன். அதை இவர்கள் கூறும்போது அரபிகள் இவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்; அரபி அல்லாதவர்கள் இவர்களுக்கு வரி செலுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: “எனது தந்தையின் சகோதரரே! அவர்களுக்கு ஏற்றமான ஒன்றை நோக்கி அவர்களை நான் அழைக்க வேண்டாமா?” என்று நபி (ஸல்) கேட்க, “நீ அவர்களை எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்கள் ஒரு வாக்கியத்தைச் சொல்ல வேண்டும் என்றுதான் அழைக்கிறேன். அந்த வாக்கியத்தால் அரபியர்கள் அவர்களுக்குப் பணிவார்கள்; அரபி அல்லாதவர்களையும் அவர்கள் ஆட்சி செய்யலாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் வருவதாவது: “ஒரே ஒரு சொல்லை அவர்கள் சொல்லட்டும். அதனால் அவர்கள் அரபியர்களை ஆட்சி செய்யலாம்; அரபி அல்லாதவர்களும் அவர்களுக்குப் பணிந்து நடப்பார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இதை கூறி முடித்தவுடன் இவ்வளவு பயன்தரும் சொல்லை எப்படி மறுப்பது? என்ன பதில் கூறுவது? என்று தெரியாமல் அனைவரும் திகைத்து அமைதி காத்தனர். பிறகு அபூஜஹ்ல் “அது என்ன சொல்? உமது தந்தையின் மீது சத்தியமாக! நாங்கள் அதையும் கூறுகிறோம். அதுபோன்று பத்து சொற்களையும் கூறுகிறோம்” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் “லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு விலகிவிட வேண்டும்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டு “முஹம்மதே! என்ன? கடவுள்களை எல்லாம் ஒரே கடவுளாக ஆக்கப் பார்க்கிறாயா? உனது பேச்சு மிக ஆச்சரியமாக இருக்கின்றதே!” என்றார்கள்.

பிறகு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயம் (வாக்குறுதிகளில்) நீங்கள் விரும்பும் எதையும் இவர் உங்களுக்குக் கொடுக்க மாட்டார்; நீங்கள் எழுந்து செல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அவருக்கும் மத்தியில் தீர்ப்பு அளிக்கும் வரை உங்களது மூதாதையரின் மார்க்கத்திலேயே நிலைத்திருங்கள்” என்று கூறினார்கள். அதற்குப் பின் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.