பக்கம் - 128 -
2) உள்ளங்களை ஈர்க்கும் தலைமைத்துவம்

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல், முழு மனித குலத்திற்கும் மிக உயர்ந்த வழிகாட்டும் தலைவராக இருந்தார்கள். அழகிய குணங்களும், உயர்ந்த பண்புகளும், சிறந்த பழக்க வழக்கங்களும், பெருந்தன்மையும் அவர்களின் இயற்கைக் குணமாக இருந்தது. இதனால் அவர்களின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டன. அவர்களுக்காக பல உயிர்கள் தியாகங்கள் செய்யத் துணிந்தன. அவர்களிடம் இருந்த உயர்ந்த நற்பண்புகளைப் போன்று வேறு எவரும் பெற்றிருக்கவில்லை. சிறப்பு, உயர்வு, கண்ணியம், மதிப்பு, பெருந்தன்மை, வாய்மை, நன்னடத்தை, பணிவு ஆகியவற்றில் எதிரிகள்கூட சந்தேகிக்க முடியவில்லை எனும்போது அவர்களது அன்பர்கள், நண்பர்கள் பற்றி என்ன கூற முடியும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு வார்த்தையை செவிமடுத்தாலும் அதை உண்மை என்றே அவர்கள் உறுதிகொள்வர்.

குறைஷிகளில் மூவர் ஓரிடத்தில் ஒன்று கூடினர். இவர்கள் ஒவ்வொருவரும் பிறருக்குத் தெரியாமல் இரகசியமாகக் குர்ஆனை செவிமடுத்து இருந்தார்கள். ஆனால், பிறகு இவர்களது இரகசியம் வெளியாகிவிட்டது. மூவரில் ஒருவன் அவர்களில் இரண்டாமவனான அபூஜஹ்லிடம் “முஹம்மதிடம் நீ கேட்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கவன் “நான் என்ன கேட்டு விட்டேன். எங்களுக்கும் அப்து மனாஃப் குடும்பத்திற்கும் சிறப்பு விஷயத்தில் போட்டி வந்தபோது அவர்கள் ஏழைகளுக்கு உணவளித்தார்கள்; நாங்களும் உணவளித்தோம்; அவர்கள் வாகனமற்றவர்களுக்கு வாகனங்களை வழங்கினார்கள்; நாங்களும் வழங்கினோம்; தர்மம் செய்தார்கள்; நாங்களும் தர்மம் செய்தோம். இவ்வாறு நாங்கள் நன்மையான விஷயத்தில் பந்தய குதிரைகளைப் போன்று ஆகிவிட்டோம். அப்போது அப்து மனாஃபின் குடும்பத்தார்கள் எங்களுக்கு இறைத்தூதர் இருக்கிறார், அவருக்கு வானத்திலிருந்து வஹி (இறைச்செய்தி) வருகிறது” என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல் “இந்தச் சிறப்பை எப்பொழுதும் நாங்கள் அடைந்து கொள்ளவே முடியாது” என்று பொறாமையுடன் கூறி, நீங்கள் கூறும் இந்த நபியை ஒருக்காலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது உண்மைப்படுத்தவும் முடியாது என்று கூறிவிட்டான். (இப்னு ஹிஷாம்)

“முஹம்மதே! நாங்கள் உம்மை பொய்ப்பிக்கவில்லை. நீ கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் பொய்ப்பிக்கின்றோம்” என்று அபூஜஹ்ல் எப்போதும் கூறி வந்தான். அதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது: (ஸுனனுத் திர்மிதி)

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர். (அல்குர்ஆன் 6:33)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நிராகரிப்பவர்கள் மும்முறை எல்லைமீறி குத்தலாகப் பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குறைஷி கூட்டமே! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டுவிடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (இதே நிலையில் நீங்கள் நீடித்தால் அதிவிரைவில் உங்களது கதை முடிந்துவிடும்)” என்று எச்சரித்தார்கள். இவ்வார்த்தை அவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்களுக்கு கடும் எதிரியாக இருந்தவர் கூட அவர்களை மிக அழகிய முறையில் சமாதானப்படுத்தினார்.

ஒருமுறை அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் குடல்களை ஸஜ்தாவில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் போட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் நபியவர்கள் கையேந்திய போது எதிரிகளின் சிரிப்பு மறைந்து கவலையும், துக்கமும் அவர்களைப் பீடித்துக் கொண்டது. நிச்சயமாக தங்களுக்கு நாசம்தான் என்பதை உறுதியாக விளங்கிக் கொண்டனர்.