பக்கம் - 132 -
அலிஃப்; லாம்; மீம். மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29:1,2,3)

மேலும், குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வை மறுத்தவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் முற்றிலும் தெளிவான பதில்களைத் தந்ததுடன், இதே வழிகேட்டில் அவர்கள் நிலைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்படும் கெட்ட முடிவைப் பற்றியும் எச்சரித்தன. இதற்கு ஆதாரமாக அல்லாஹ் தனது நேசர்கள் மற்றும் எதிரிகள் ஆகியோருடன் நடந்துகொண்ட வரலாற்று சம்பவங்களைத் தெளிவாகக் குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கூறின. சில நேரங்களில் மிகவும் மிருதுவாக அவர்கள் இருந்த வழிகேட்டை உணர்த்தி விளக்கமளிக்க வேண்டிய கடமையையும் குர்ஆன் வசனங்கள் செய்தன.

குர்ஆன் முஸ்லிம்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. இப்பிரபஞ்சத்தில் உள்ள அல்லாஹ்வின் அற்புத படைப்புகளையும் அவன் அவற்றை அழகிய முறையில் நிர்வகிப்பதையும் அதன் மூலம் அவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பதையும் அவனை வணங்கும்போது அவன் பொழியும் அன்பு, அருள், பொருத்தம் எவ்வளவு மகத்துவமிக்கது, எவ்வளவு பாக்கியம் பெற்றது என்பதையும் குர்ஆன் முஸ்லிம்களுக்கு விளங்கவைத்தது. இதன் மூலம் முஸ்லிம்கள் அடைந்த மன திருப்திக்கும், மன அமைதிக்கும் எதுவும் சமமாக முடியாது.

இவ்வகையான வசனங்களில் முஸ்லிம்களிடம் நேரடியாக அழைத்துப் பேசிய வசனங்களும் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும்:

அவர்களது இறைவன் தன்னுடைய அன்பையும், பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக அவர்களுக்கு நற்செய்தி கூறுகின்றான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான இன்பம் உண்டு. (அல்குர்ஆன் 9:21)

தங்களுக்கு அநீதமிழைத்து, தங்கள் மீது வரம்பு மீறி கொடுமை புரிந்த இறைமறுப்பாளர்களான தங்களின் எதிரிகளின் நிலை, நாளை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று முஸ்லிம்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு அதையும் குர்ஆன் தெளிவுபடுத்தியது.

இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி “(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும். (அல்குர்ஆன் 54:48)

அந்த நிராகரிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்பட்டு கைதிகளாக விலங்கிடப்பட்ட நிலையில் முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவார்கள். இதோ (ஸகர்) நரகத்தின் வேதனையை சுவைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறப்படும்.