பக்கம் - 177 -
(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன். (அல்குர்ஆன் 8:30)

நபியவர்கள் புறப்படுகிறார்கள்

குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாரிப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது. (அல்குர்ஆன் 36:9)

நபி (ஸல்) இவ்வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து வெளியேறி சென்றார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார்கள். பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர் (ரழி) அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள ‘ஸவ்ர்’ குகையை வந்தடைந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முற்றுகையிட்டிருந்தவர்கள் நடுநிசியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. வெளியிலிருந்து வந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் இவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் “நீங்கள் எதை எதிர்பார்த்திருக்கின்றீர்கள்” என்று கேட்டார். அவர்கள் “நாங்கள் முஹம்மதை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றனர். அவர் “நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் நஷ்டமடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போதுதானே முஹம்மது உங்களைக் கடந்து செல்கிறார். உங்களது தலையின் மீது மண் தூவப்பட்டுள்ளதே! நீங்கள் பார்க்கவில்லையா?” என்று அவர் கூற, அவர்கள் தங்கள் தலையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவரைப் பார்க்கவில்லையே! எப்படி அவர் சென்றிருப்பார்!” என்று திகைத்தனர்.

இருப்பினும் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு அலீ (ரழி) படுத்திருப்பதை நபி என்று எண்ணி, “இதோ முஹம்மதுதான் தூங்குகிறார். இது அவருடைய போர்வைதான்” என்று கூறி, அவர் வெளியேறுவதை எதிர்பார்த்தவர்களாகவே விடியும்வரை நின்றிருந்தனர். ஆனால், காலையில் விரிப்பிலிருந்து அலீ (ரழி) எழுந்து வெளியே வருவதைப் பார்த்ததும், கைசேதமடைந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கவே அலீ (ரழி) “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறுத்துவிட்டார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)