பக்கம் - 204 -
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்துவிடுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: “தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்.” (பைஹகி)

மேலும் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும், “பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி” என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல!“(முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் கூறினார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் “முத்திரையிடப்பட்ட சுவன மது”வைக் குடிக்கக் கொடுப்பான்.” (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: “ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)

மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.

இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள். இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள். அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)

மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ளரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன அவர்களுக்காக அர்ப்பணமாயின் அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.

இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.

இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்வமான, உள்ளரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.