பக்கம் - 222 -
மக்காவில் எச்சரிப்பவர்

வியாபாரக் கூட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அபூஸுஃப்யான் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்தார். மக்காவின் பாதை இப்போது ஆபத்துகள் நிறைந்தது என்பதையும் அறிந்திருந்தார். எனவே, செய்திகளைச் சேகரித்தவராகத் தனக்கு எதிர்வரும் வாகனிகளிடம் நிலைமைகளை விசாரித்துக் கொண்டே பயணித்தார். அப்போது முஹம்மது (ஸல்) தங்களது தோழர்களை அழைத்துக் கொண்டு இந்த வியாபாரக் கூட்டத்தை கைப்பற்ற புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி அபூஸுஃப்யானுக்குக் கிடைத்தது. அபூஸுஃப்யான் உடனடியாக ழம்ழம் இப்னு அம்ர் அல்கிஃபா என்பவருக்கு கூலி கொடுத்து, மக்காவிற்குச் சென்று தங்களின் வியாபாரக் கூட்டத்தை காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு குறைஷிகளுக்கு அறிவிப்புச் செய்ய அனுப்பி வைத்தார். ழம்ழம் மக்காவிற்கு விரைந்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் ஒட்டகத்தின் மீது நின்றவராக கூக்குரலிட்டார். மேலும், ஒட்டகத்தின் மூக்கை அறுத்து அதன் மேலுள்ள கஜாவா பெட்டியையும் மாற்றி அமைத்து தனது சட்டையையும் கிழித்துக் கொண்டார். பின்பு “குறைஷிகளே! வியாபாரக் கூட்டம்! வியாபாரக் கூட்டம்! அபூ ஸுஃப்யானுடன் வந்து கொண்டிருக்கும் செல்வங்களை முஹம்மது தன் தோழர்களுடன் வழிமறிக்கக் கிளம்பிவிட்டார். அது உங்களுக்குக் கிடைக்குமென்று நான் கருதவில்லை. உதவி! உதவி! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று உரக்கக் கத்தினார்.

மக்காவாசிகள் போருக்குத் தயார்

இதைக் கேட்ட மக்காவாசிகள் அங்குமிங்கும் ஓடலானார்கள். “என்ன! முஹம்மதும் அவரது தோழர்களும் எங்களது வியாபாரக் கூட்டம், இப்னுல் ஹழ்ரமியின் வியாபாரக் கூட்டத்தைப் போன்று ஆகிவிடுமென்று எண்ணுகிறார்களா? ஒருக்காலும் அவ்வாறு ஆகாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எதிர்பார்க்காதது நடக்கப் போகிறது. அதை அவர் நன்கு அறிந்து கொள்வார்” என்று பேசிக் கொண்டனர். மக்காவில் உள்ள அனைவரும் வெளியேறத் தயாரானார்கள். அப்படி தன்னால் முடியவில்லையானாலும் தனக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி வைத்தார்கள். மக்காவிலுள்ள பிரசித்திபெற்ற பிரமுகர்கள் அனைவரும் இப்போரில் கலந்து கொண்டனர். ஆனால், அதில் கலந்து கொள்ள முடியாத அபூலஹப் மட்டும் தனக்குக் கடன் தரவேண்டிய ஒருவரை தனக்குப் பகரமாக அனுப்பினான். மேலும், குறைஷிகள் தங்களைச் சுற்றியுள்ள அரபியர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தனர். ‘அதீ’ கிளையினரைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் அதில் கலந்து கொண்டனர். ‘அதீ’ கிளையினரிலிருந்து ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.

மக்கா நகர படையின் அளவு

மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான். இப்படைக்கு செலவு செய்வதற்குரிய பொறுப்பைக் குறைஷிகளின் ஒன்பது முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர். ஒரு நாள் ஒன்பது ஒட்டகம் மற்றொரு நாள் பத்து ஒட்டகம் என அறுத்து உணவளித்தனர்.

பக்ர் கிளையினரை அஞ்சுதல்

மக்காவின் படை புறப்படுவதற்கு ஒன்றுகூடிய போது பக்ர் கிளையினரைப் பற்றிய நினைவு அவர்களுக்கு வந்தது. குறைஷிகளுக்கும் இவர்களுக்குமிடையில் நீண்ட காலமாகப் பகைமை இருந்தது. இவர்கள் பின்புறமாகத் தங்களை தாக்கிவிட்டால் இரு நெருப்புக்கிடையில் சிக்கிக் கொள்வோமே என்று பயந்து பின்வாங்கினர். ஆனால், அந்நேரத்தில் பக்ர் கிளையினரின் முக்கிய பிரிவான கினானாவின் தலைவர் சுராகா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமின் உருவத்தில் ஷைத்தான் தோற்றமளித்து “கினானா கிளையினர் உங்களுக்குப் பின்புறமாக தாக்குவதிலிருந்து நான் பாதுகாப்பளிக்கிறேன். நீங்கள் துணிந்து செல்லலாம்” என்று கூறினான்.