பக்கம் - 243 -
6) நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து நிலைமைகளைக் கவனித்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளைக் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வாசலில் வாளேந்தி காவல் புரிந்த ஸஅது இப்னு முஆது (ரழி) முஸ்லிம்களின் இச்செயலைப் பார்த்து வெறுப்படைந்தார். ஸஅதின் முகத்தில் வெறுப்பைப் கண்ட நபி (ஸல்) “ஸஅதே! இம்மக்கள் செய்வதை நீர் வெறுக்கிறீர் போலும்” என்றார்கள். அதற்கு ஸஅது (ரழி) “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ் இணைவைப்பவர்களுக்குக் கொடுத்த முதல் சேதமாகும். எனவே, அவர்களிலுள்ள ஆண்களை உயிரோடு விடுவதைவிட அதிகமாக அவர்களைக் கொன்று குவிப்பதே எனக்கு மிக விருப்பமானது” என்றார்.

7) இப்போரில் உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அஸதி (ரழி) அவர்களின் வாள் ஒடிந்து விடவே, அவருக்கு நபி (ஸல்) மரக்கிளை ஒன்றைக் கொடுத்து “உக்காஷாவே! இதன் மூலம் நீர் போரிடுவீராக” என்றார்கள். உக்காஷா நபி (ஸல்) அவர்களிடமிருந்து தனது கையில் வாளை வாங்கியவுடன் அந்த மரக்கிளை உறுதிமிக்க நீண்ட ஒரு வாளாக மாறியது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி கொடுக்கும் வரை அவ்வாளால் உக்காஷா போரிட்டார். அவ்வாளுக்கு ‘அல்அவ்ன்’ (உதவி) என்று பெயர் கூறப்பட்டது. இந்த வாளை மற்றும் பல போர்களில் உக்காஷா (ரழி) பயன்படுத்தினார்கள். இறுதியாக அபூபக்ர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸைலமாவுடன் நடந்த போரில் உக்காஷா வீரமரணம் எய்தினார்கள்.

8) போர் முடிந்ததற்குப் பின்பு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) தனது சகோதரர் அபூஅஜீஸ் இப்னு உமைரைப் பார்த்தார்கள். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் கலந்திருந்தார். மதீனாவாசிகளில் ஒருவர் அவரது இரு கைகளையும் கட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த முஸ்அப் அவரிடம் “நீங்கள் அவரை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவரது தாய் மிகுந்த செல்வமுடையவர். உங்களிடமிருந்து இவரை அதிக கிரயம் கொடுத்து விடுவிப்பார்” என்றார்கள். இதைக் கேட்ட அவரது சகோதரர் “எனது சகோதரனே! இதுதான் நீ எனக்காக செய்யும் பரிந்துரையா?” என்றார். அதற்கு முஸ்அப் “இவர்தான் எனது சகோதரர் நீ அல்ல!” என்றார்கள்.
9) இணைவைப்பவர்களின் பிணங்கள் கிணற்றில் போடப்பட்டன. உத்பா இப்னு ரபீஆவின் பிணத்தைக் கிணற்றில் போடுவதற்காக இழுத்து வரும்போது, அதைப் பார்த்த அவனது மகனார் அபூஹுதைஃபா (ரழி) மிகுந்த கவலையடைந்தார். அதனால் அவரது முகமே மாறியது. அதை கவனித்த நபி (ஸல்), “உமது தகப்பனுக்காக நீ கவலைக் கொள்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி இல்லை. அல்லாஹ்வின் தூதரே! எனது தகப்பனின் விஷயத்திலும் அவர் கொலை செய்யப்பட்டதிலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், எனது தந்தை நல்ல அறிவும், புத்தியும், சிறப்பும் உடையவர். அவருக்கு இஸ்லாமின் நேர்வழி கிடைத்துவிடும் என்று ஆதரவு வைத்திருந்தேன். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. எனது இந்த ஆதரவுக்குப் பின் அவர் நிராகரிப்பில் மரணித்ததை நினைத்தே நான் கவலை அடைந்தேன்” என்றார். நபி (ஸல்) அபூ ஹுதைஃபவை உயர்வாக பேசி, அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள்.

இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போர் இறைநிராகரிப்பாளர்களுக்கு பெரிய தோல்வியாகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரிய வெற்றியாகவும் முடிந்தது. இப்போரில் முஸ்லிம்களில் முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) ஆறு நபர்களும், அன்சாரிகள் (மதீனாவாசிகள்) எட்டு நபர்களுமாக மொத்தம் பதினான்கு நபர்கள் வீரமரணம் எய்தினர்.