பக்கம் - 245 -
நபி (ஸல்) அவர்களின் அடிமை அபூராபிஃ (ரழி) கூறுகிறார்கள்: நான் ஆரம்பத்தில் அப்பாஸ் (ரழி) அவர்களின் அடிமையாக இருந்தேன். அப்பாஸ் (ரழி) அவர்கள் வீட்டில் அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தனர். அதாவது அப்பாஸ் (ரழி), உம்முல் ஃபழ்ல் (ரழி) மற்றும் நான் ஆக அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தோம். ஆனால், அப்பாஸ் (ரழி) தான் முஸ்லிமானதை மறைத்திருந்தார். அபூலஹப் பத்ரில் கலந்துகொள்ளாமல் மக்காவில் தங்கியிருந்தான். பத்ருடைய செய்தியினால் அல்லாஹ் அவனது அகம்பாவத்தை அழித்து அவனை அவமானப்படுத்தினான். அச்செய்தியினால் எங்கள் உள்ளத்தில் துணிவும் வலிமையும் பிறந்தது. ஆனால், நானோ ஒரு பலவீனமானவன். ஜம்ஜம் கிணற்றுக்கு அருகிலுள்ள அறையில் அமர்ந்து அம்புகள் செய்வது எனது தொழிலாக இருந்தது. ஒரு நாள் நான் அம்புகள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். உம்முல் ஃபழ்லு எனக்கருகில் அமர்ந்திருந்தார். பத்ரிலிருந்து வந்த செய்தியால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். அதுசமயம் அபூலஹப் தனது கால்களை மிக மோசமாக பூமியில் தேய்த்தவனாக வந்து எங்களது அறையின் ஓரத்தில் அமர்ந்தான். அவனது முதுகு எனது முதுகைப் பார்த்தவாறு இருந்தது.

அப்போது “இதோ! அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் வருகிறார்” என்று மக்கள் கூறினர். அபூலஹப் அபூஸுஃப்யானிடம் “எனக்கருகில் வா! உன்னிடம் உண்மையான செய்திகள் இருக்கலாம்” என்று கூறினான். அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் அபூலஹபுக்கு அருகில் வந்து அமர்ந்தார். மக்கள் அவரை சுற்றி நின்றுகொண்டனர். அபூஸுஃப்யானிடம் அபூலஹப் “எனது சகோதரன் மகனே! மக்களின் செய்தி என்னவானது?” என்றான். அதற்கு அபூஸுஃப்யான் “முஸ்லிம்களை நாங்கள் சந்தித்த போது அவர்களுக்கு எங்களது புஜங்களைத் தந்தோம். முஸ்லிம்கள் நாடியவாறு எங்களைக் கொன்றனர் நாடியவாறு சிறைபிடித்தனர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமது மக்கள் இந்தளவு பலம் இழந்ததற்கு நான் அவர்களைக் குறை கூறவில்லை. வானத்திற்கும், பூமிக்கும் மத்தியில் சிறந்த குதிரைகளின் மீது வீற்றிருந்த வெள்ளை நிறத்தில் பலரை நாங்கள் பார்த்தோம். அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. எங்களால் அவர்களை எதிர்க்கவும் முடியவில்லை” என்று கூறினார்.

அபூராஃபிஃ (ரழி) தொடர்ந்து கூறுகிறார்: நான் அறையின் ஓரத்தை விலக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் வானவர்கள்” என்றேன். இதைக் கேட்ட அபூலஹப், தன் கையை உயர்த்தி எனது கன்னத்தில் கடுமையாக அறைந்தான். நானும் அவன் மீது பாய்ந்தேன், அவனை எதிர்த்தேன். அவன் என்னை தூக்கி பூமியில் வீசினான். பின்பு என் மீது அமர்ந்து என்னை அடித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாத வகையில் நான் வலுவிழந்தவனாக இருந்தேன். எனது நிலையைப் பார்த்த உம்முல் ஃபழ்ல் கூடாரத்தின் ஒரு தடியை உருவி பயங்கரமாக அவனது தலையில் அடித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. “ஏண்டா! இவரது எஜமானன் இல்லாததால் இவரை ஆதரவற்றவர் என்று நீ கருதிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்குப் பிறகு அங்கிருந்து கேவலப்பட்டு அபூலஹப் எழுந்து சென்றான். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஏழு நாட்கள் கழித்து அல்லாஹ் அவனது உடலில் அம்மையைப் போன்ற ஒரு நோயை ஏற்படுத்தினான். அந்நோய் அவனைக் கொன்றது. அதாவது, இந்நோயை அரபியர்கள் மிக துர்க்குறியாக கருதியதால் அவனது பிள்ளைகள் யாரும் அவனுக்கருகில் நெருங்கவில்லை. அவன் செத்த பிறகும் அவனைப் புதைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் தங்களை பழிப்பார்கள் என்று பயந்தவுடன் ஒரு பெரும் குழியைத் தோண்டி, ஒரு குச்சியால் அவனை அக்குழியில் தள்ளினர். பின்பு தூரத்தில் இருந்து கற்களை எறிந்து அக்குழியை மூடினர்.