பக்கம் - 246 -
இவ்வாறுதான் பத்ர் மைதானத்தில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியின் செய்திகளை மக்கா பெற்றது. இச்செய்தி அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் ஆனந்தமடையக் கூடாது என்பதற்காக கொல்லப்பட்டவர்கள் மீது ஒப்பாரி வைப்பதையும் மக்காவாசிகள் தடை செய்தனர்.

நகைச்சுவை செய்தி ஒன்றைப் பார்ப்போம்: அஸ்வத் இப்னு முத்தலிபின் மூன்று ஆண் பிள்ளைகளும் பத்ர் போரில் கொல்லப்பட்டனர். எனவே, அவர்களுக்காக அழ வேண்டுமென்று அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு கண் தெரியாது. ஒரு நாள் ஒப்பாரி வைக்கும் ஒரு பெண்ணின் சப்தத்தைக் கேட்ட அவர் தனது அடிமையை அனுப்பி “என்ன! ஒப்பாரியிடுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதா? போரில் கொல்லப்பட்டவர்களுக்காக குறைஷிகள் அழுகிறார்களா? என்று பார்த்து வாரும். நான் எனது மகன் அபூ ஹகீமாவிற்காக அழவேண்டும். அவனது மரணத்தால் எனது உள்ளம் எரிந்துவிட்டது” என்று கூறினார். அவரது அடிமை அவரிடம் திரும்பி வந்து “அது தனது ஒட்டகத்தை தொலைத்துவிட்ட ஒரு பெண்ணின் அழுகை” என்றார். இதனைக் கேட்ட அஸ்வத் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் இக்கவிதைகளைப் படித்தார்.

அவள் ஒட்டகம் காணவில்லை என அழுகிறாளா?
அதற்காக கண்விழித்து தூக்கத்தைத் துறந்து விட்டாளா?
ஒட்டகத்திற்காக அழாதே! விதிகள் ஏமாற்றிய பத்ர் போருக்காக அழு!
ஆம்! பத்ரின் மீது அழு! ஹுசைஸ், மஃக்ஜும் கூட்டத்தினர் மீது அழு!
அழ வேண்டுமானால் அக்கீல் மீது அழு!
சிங்கங்களின் சிங்கம் ஹாரிஸின் மீது அழு!
ஆம்! இவர்களுக்காக நீ அழத்தான் வேண்டும்!
அனைவரையும் நீ பெயர் குறிப்பிடத் தேவையில்லை.
அபூ ஹகீமுக்கு நிகர் எவருமில்லையே!
என்ன கேடு? அவர்களுக்குப் பிறகு சிலர் தலைவராகி விட்டனர்!
பத்ர் என்றொரு தினம் இல்லையென்றால்...
அவர்கள் ஒருக்காலும் தலைவர்களாக ஆகியிருக்க முடியாது!!

வெற்றியை மதீனா அறிகிறது

முஸ்லிம்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த நற்செய்தி மதீனாவாசிகளுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களை மதீனாவின் மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஜைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை மதீனாவின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

யூதர்களும், நயவஞ்சகர்களும் மதீனாவில் பல பொய்யான வதந்திகளைப் பரப்பினர். “நபி (ஸல்) கொல்லப்பட்டார்கள்” என்று பொய் பிரச்சாரம் செய்தனர். நயவஞ்சகர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமான ‘கஸ்வா“வில் ஜைது இப்னு ஹாரிஸா வருவதைப் பார்த்து “நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார். அதற்கு ஆதாரம், இதோ... முஹம்மதின் ஒட்டகம். நாங்கள் இதை நன்கு அறிவோம். பயத்தால் என்ன கூறுவது என்றே ஜைதுக்கு தெரியவில்லை. இவர் போரில் தோற்று வருகிறார்” என்று உளறினான்.