பக்கம் - 247 -
இரண்டு தூதர்களும் மதீனாவிற்கு வந்தவுடன் முஸ்லிம்கள் அவர்களைச் சூழ்ந்து அவர்கள் கூறும் செய்திகளைக் கேட்டனர். முஸ்லிம்கள் வெற்றி அடைந்தார்கள் என்ற செய்தி அவர்களுக்கு உறுதியானவுடன் மகிழ்ச்சி மிகுதியால் தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழங்கினர். மதீனாவில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இம்மகத்தான வெற்றிக்காக வாழ்த்துக் கூற பத்ரின் பாதையை நோக்கி விரைந்தனர்.

உஸாமா இப்னு ஜைது (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) தங்களது மகள் ருகையாவை கவனித்துக் கொள்வதற்காக அவரது கணவராகிய உஸ்மான் (ரழி) அவர்களுடன் என்னையும் விட்டுச் சென்றிருந்தார்கள். ருகையா (ரழி) இறந்துவிடவே அவர்களை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்துகையில் “பத்ர் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்” என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.

இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

நபி (ஸல்) போர் முடிந்த பிறகு பத்ர் மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு போரில் கிடைத்த பொருட்கள் விஷயத்தில் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. கருத்து வேற்றுமை பலமாகவே, அனைவரும் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அதற்கிணங்க அனைவரும் தங்கள் வசம் இருந்த அனைத்தையும் நபியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு இப்பிரச்சனைக்குத் தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்.

இந்நிகழ்ச்சி பற்றி விரிவாக உபாதா இப்னு ஸாமித் (ரழி) கூறுவதைக் கேட்போம். அவர்கள் கூறுவதாவது:

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றோம். போரில் அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்து முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களில் ஒரு சாரார் எதிரிகளை விரட்டி அடிப்பதிலும் அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொல்வதிலும் மும்முரமாக இருந்தனர். இன்னொரு சாரார் எதிரிகளின் பொருட்களை ஒன்று திரட்டினர். மற்றுறொரு சாரார் நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அவர்களைச் சுற்றி பாதுகாத்தனர்.

இரவில் போர் முடிந்து மக்கள் ஒன்று சேர்ந்த போது பொருட்களை சேகரித்தவர்கள் “நாங்கள்தான் பொருட்களை ஒன்று சேர்த்தோம். எனவே, அதில் வேறு யாருக்கும் எவ்வித பங்கும் கிடையாது” என்றனர்.

எதிரிகளை விரட்டியவர்கள், “எங்களைப் பார்க்கிலும் அதிகமாக உங்களுக்கு அதில் உரிமை இல்லை, நாங்கள்தான் எதிரிகளை துரத்தினோம், தோற்கடித்தோம். எனவே, எங்களுக்கே அது உரிமையானது. எங்களைவிட நீங்கள் அதற்கு உரிமையுடையவர்களாக இருக்க முடியாது” என்றனர்.

நபியவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள், “நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்கிடுவர் என்ற பயத்தாhல் நாங்கள் அவர்களை பாதுகாப்பதில் இருந்தோம். எனவேதான் உங்களுடன் எங்களால் செயல்படமுடியவில்லை. ஆகவே எங்களுக்கும் அதில் பங்கு வேண்டும்” என்றனர்.