பக்கம் - 268 -
இவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த போது அஸ்வத் இப்னு அப்துல் முத்தலிப், “இம்முறை கடற்கரை வழியாக செல்லும் பாதையைத் தவிர்த்து விட்டு இராக் வழியை எடுத்துக்கொள்!” என்று ஸஃப்வானிடம் கூறினார். இப்பாதை மிக நீளமானது மதீனாவின் கிழக்குப் பக்கமாக வெகு தொலைவில் உள்ளது. இப்பாதை நஜ்து மாநிலத்தைக் கடந்து ஷாம் செல்கிறது. குறைஷிகள் இந்தப் பாதையை முற்றிலும் அறியாதவர்களாக இருந்தனர். எனவே, பக்ருப்னு வாயில் கிளையைச் சார்ந்த ‘ஃபுராத் இப்னு ஹையா“னை வழிகாட்டியாகவும் பயண அமைப்பாள ராகவும் ஆக்கிக் கொள்ள ஸஃப்வானுக்கு அஸ்வத் இப்னு அப்துல் முத்தலிப் ஆலோசனைக் கூறினார்.

இவ்வாறு, ஸஃப்வான் இப்னு உமையாவுடைய தலைமையில் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் மக்காவிலிருந்து புதிய பாதையில் புறப்பட்டது. எனினும், இக்கூட்டத்தின் செய்தியும் அதன் பயணத் திட்டமும் வெகு விரைவில் மதீனாவிற்கு எட்டியது.

அது எப்படியெனில்: ஏற்கனவே மக்காவில் இருந்த ‘ஸலீத் இப்னு நுஃமான்’ என்ற முஸ்லிம் நுஅய்ம் இப்னு மஸ்வூதுடன் மது அருந்தினார். (இச்சம்பவம் மது ஹராமாக்கப்படுவதற்கு முன் நடந்ததாகும்.) நுஅய்ம் அப்போது முஸ்லிமாக இருக்கவில்லை. நுஅய்முக்கு நன்கு போதை ஏறியவுடன் இந்த வியாபாரக் கூட்டத்தைப் பற்றியும் அது எவ்வழியாக செல்கிறது என்பதையும் தன்னை அறியாமல் போதையில் உளற, உடனே வலீத் சபையிலிருந்து நழுவி மதீனா விரைந்தார். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து முழு விவரத்தையும் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். 100 பேர் கொண்ட வாகனப் படையை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையின் கீழ் குறைஷிகளைத் தாக்க அனுப்பி வைத்தார்கள். ஜைது (ரழி) தங்களது வீரர்களுடன் விரைந்து சென்று, நஜ்து மாநிலத்தில் ‘கர்தா’ என்ற இடத்தின் நீர் தேக்கத்திற்கு அருகில் அந்த வியாபாரக் கூட்டம் தங்கியிருந்த போது திடீரென அதன் மீது தாக்குதல் நடத்தி வியாபாரப் பொருட்களை கைப்பற்றினார்கள். ஸஃப்வானும் அக்கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருந்த வீரர்களும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து ஓடினர்.

முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த ஃபுர்ராத் இப்னு ஹய்யானைக் கைது செய்தனர். சிலர், “இவரையன்றி மேலும் இருவரையும் முஸ்லிம்கள் கைது செய்தனர்” என்றும் கூறுகின்றனர். முஸ்லிம் வீரர்கள் இந்த வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் திர்ஹம் ஆகும். நபி (ஸல்) ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அதில் கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.

பத்ர் போரினால் நீங்கா துயரத்தில் சிக்கியிருக்கும் குறைஷிகளுக்கு இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த நிம்மதியையும் பறித்தது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து மட்டிலா கவலைக்குள்ளாயினர். அவர்களின் உள்ளங்கள் குமுறின.

இப்போது குறைஷிகளுக்கு முன் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று, தங்களது அடாவடித் தனத்தை நிறுத்திவிட்டு முஸ்லிம்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வது. இரண்டாவது மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து முஸ்லிம்களை வேரறுத்து, தங்களது பழைய மதிப்பையும் மரியாதையையும் தக்கவைத்துக் கொள்வது. இந்த இரு வழிகளில் குறைஷிகள் இரண்டாவது வழியையே விரும்பினர். ஆகவே, முஸ்லிம்களிடம் பழி வாங்க வேண்டும் முழு தயாரிப்புடன் சென்று அவர்களைத் தாக்க வேண்டும் என அவர்கள் பிடிவாதம் பிடித்தனர். இந்த பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்தது. இதுவும் இதற்கு முன் கூறப்பட்ட நிகழ்ச்சிகளும் உஹுத் போர் ஏற்படுவதற்கு வலுவான காரணங்களாக அமைந்தன.