பக்கம் - 291 -
மேற்கூறப்பட்ட அந்த தருணம் நபியவர்களின் வாழ்க்கையிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆனால், எதிரிகளைப் பொறுத்தவரையில் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்கு அவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. அதை பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தாமதிக்கவில்லை. உடனடியாக நபியவர்களை நோக்கி தங்களது தாக்குதலைத் தொடுத்தனர். நபியவர்களின் கதையை முடிக்க வேண்டும் என்று வெறி கொண்டனர். உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். நபியவர்களின் வலது கீழ் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது. நபியவர்களை நோக்கி ஓடிவந்த அப்துல்லாஹ் இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் நபியவர்களின் முகத்தைக் காயப்படுத்தினான். அப்துல்லாஹ் இப்னு கமிஆ நபியவர்களின் புஜத்தின் மீது வாளால் ஓங்கி வெட்டினான். நபியவர்கள் இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்ததால் அந்த வெட்டு நபி (ஸல்) அவர்களின் உடலில் படவில்லை. ஆனால், தாக்கிய வேகத்தின் வலி ஒரு மாதம் வரை நீடித்திருந்தது. பின்பு நபியவர்களின் முகத்தை நோக்கி வாளை வீசினான். அதனால், நபியவர்கள் அணிந்திருந்த இரும்பு கவசத்தின் இரண்டு ஆணிகள் முகத்தில் குத்தின. அவன் “இதை வாங்கிக்கொள். நான்தான் இப்னு கமிஆ” என்று கூறினான். அப்போது நபியவர்கள் தனது முகத்தில் இருந்து இரத்தத்தை துடைத்தவர்களாக ‘அக்மஅகல்லாஹு’ (அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக) என்று கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரி)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். இப்போருக்குப் பின் ஒரு நாள் தனது ஆட்டு மந்தையைத் தேடி இப்னு கமிஆ புறப்பட்டான். அவனது ஆட்டு மந்தை மலை உச்சியின் மீது இருப்பது தெரியவே அவன் அங்கு சென்ற போது, கொம்புள்ள ஒரு முரட்டு ஆடு அவனை இடைவிடாமல் தாக்கி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளியது. (ஃபத்ஹுல் பாரி)

உஹுத் போரின் இந்த இக்கட்டான தருணத்தில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுடைய தூதரின் முகத்தைக் காயப்படுத்திய கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின் கோபம் கடினமாகட்டும்” என்று பிரார்த்தித்தார்கள். சிறிது நேரம் கழித்து “அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை மன்னித்து விடு. நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்” என்று வேண்டினார்கள். (ஃபத்ஹுல் பாரி, முஃஜமுத் தப்ரானி)

காஜி இயாழ் அவர்களின் ‘ஷிஃபா’ என்ற நூலில் இவ்வாறு வந்துள்ளது: “அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை நேர்வழியில் நடத்து! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்” என பிரார்தித்ததாக வந்துள்ளது.

“உஹுத் போரில் நபி (ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டது. நபியவர்களின் தலையிலும் பலமான காயம் ஏற்பட்டது. அப்போது நபியவர்கள் தன் மீது வழிந்தோடிய இரத்தத்தை அகற்றியவர்களாக “அல்லாஹ்வின் தூதராகிய நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க, அவர்களோ எனது முகத்தையும் முன் பல்லையும் உடைத்து விட எவ்வாறு அவர்கள் வெற்றிபெற முடியும்?” என்று கூறினார்கள். அல்லாஹ் இது தொடர்பாகவே இந்த வசனத்தை இறக்கினான்.

(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்து விடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். (அல்குர்ஆன் 3:128) (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)