பக்கம் - 299 -
ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: “(மற்றொருமுறை) எதிரிகள் மலைக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “அவர்களை நீ விரட்டு!” என்றார்கள். அதற்கு “நான் எப்படி தனியாக அவர்களை விரட்ட முடியும்?” என்றேன். நபியவர்கள் “அவர்களை நீ விரட்டு!” என்று மூன்று முறை கூறவே, எனது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அக்கூட்டத்தில் முந்தி வந்து கொண்டிருந்தவனைக் குறிபார்த்து எய்தேன் அவன் செத்து மடிந்தான். நான் சென்று அந்த அம்பை எடுத்துக் கொண்டேன். பின்பு இன்னொருவரின் அருகில் வரவே அதே அம்பைக் கொண்டு எய்தேன் அவனும் செத்து மடிந்தான். நான் சென்று அம்பை எடுத்துக் கொண்டேன். அடுத்து ஒருவன் வர, அவனையும் அதே அம்பால் கொன்றேன். மூவர் இறந்தவுடன் மற்றவர்கள் ஏற அஞ்சி இறங்கி விட்டனர். அப்போது நான் “இந்த அம்பு அல்லாஹ்வின் அருள் பெற்றது” என்று கூறி அதை என் அம்புக் கூட்டில் பாதுகாத்துக் கொண்டேன்.”

இப்படி பல எதிரிகளின் உயிர்களை குடித்த அம்பை ஸஅது (ரழி) தங்களிடம் மரணம் வரை பாதுகாத்தார்கள். அவர்கள் மரணித்த பின்பு அவர்களது பிள்ளைகள் அதை பாதுகாத்து வைத்திருந்தனர். (ஜாதுல் மஆது)

போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்

நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டுமென பல முறை எதிரிகள் முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் நபியவர்களுக்கு அரணாக விளங்கியதால் எதிரிகளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இருப்பினும் நபியவர்கள் தங்களின் தாக்குதலில் இறந்திருக்கலாம் என்றும் சற்றே உறுதியாக எண்ணினர். அதனால் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட தங்களுடைய முகாம்களுக்குத் திரும்பினர். அவ்வாறு திரும்பும் போது சில ஆண்களும் பெண்களும் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் காது, மூக்கு, மர்ம உறுப்புகள் போன்றவற்றை அறுத்தனர் வயிறுகளைக் கிழித்தனர் ஹிந்த் பின்த் உத்பா என்பவள் ஹம்ஜா (ரழி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்தாள். அவளால் முடியாமல் போகவே அதைத் துப்பிவிட்டாள். பின்பு, தியாகிகளின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டாள். (இப்னு ஹிஷாம்)

இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்

இந்தக் கடைசி நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் மூலம் முஸ்லிம்களின் துணிவையும், அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை சந்திக்க வேண்டும் என்ற அவர்களுக்கு இருந்த அலாதியான ஆர்வத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

1) கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: “உஹுத் போரில் நானும் கலந்து கொண்டேன். அப்போது கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை எதிரிகள் சிதைப்பதைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டேன். அங்கே ஒருவன் உறுதியான உருக்குச் சட்டை அணிந்தவனாக கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து “அறுக்கப்பட்ட ஆடுகளைப் போன்று வீழ்ந்து கிடக்கிறார்கள்” என்று கூறியவனாக முஸ்லிம்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கவச ஆடை அணிந்த முஸ்லிம் ஒருவர் அவன் தனக்கருகில் வருவதை எதிர்பார்த்தார். நான் அந்த முஸ்லிமுக்கு பின்புறமாய் நின்றவனாக எனது பார்வையால் அந்த முஸ்லிமையும் எதிரியையும் கவனித்தேன். எதிரி நல்ல ஆயுதமுள்ளவனாகவும் வலிமை மிக்கவனாகவும் தெரிந்தான். அவ்விருவரும் சந்திப்பார்களா? என்று நான் எதிர்பார்த்தேன். அதே போரில் இருவரும் சந்தித்து சண்டையிட்டனர். முஸ்லிம் அந்த எதிரியை ஒரு வெட்டுதான் வெட்டினார். அந்த வெட்டு அவனது பிரித்தட்டு வழியாக சென்று, அவனை இரண்டாக பிளந்தது. பின்பு அவர் தனது முகத் திரையை விலக்கி என்னைப் பார்த்து “கஅபே! என்ன பார்க்கிறாய். நான்தான் அபூ துஜானா!” என்று கூறினார்.(அல்பிதாயா)