பக்கம் - 301 -
அதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)

இவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி

எதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின் உண்மை நிலைமையை அறிவதற்காக அபூ ஸுஃப்யான் மலையின் மீது ஏறி “உங்களில் முஹம்மது இருக்கிறாரா?” என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க வில்லை. பின்பு உங்களில் “அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் “உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா?” என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். “இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்” என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் “என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் “ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ மகிழத் தேவையில்லை” என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அபூ ஸுஃப்யான் மீண்டும் பேசினார். “உங்களில் கொல்லப்பட்டோன் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை” என்றார். பின்பு “ஹுபுல் எனும் சிலையே! உயர்வு உனக்குத்தான்” என்று கூறினார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க, “நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்?” என்று முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு “அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும் அவ்வாறே பதிலளித்தார்கள்.

பின்பு “எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே!” என்றார் அபூ ஸுஃப்யான்.

நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்க “நாங்கள் என்ன பதிலளிப்பது?” என்று நபித்தோழர்கள் கேட்டனர், “அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே!” என பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.