பக்கம் - 332 -
“நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்
புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்
வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்க மாட்டோம்,
தொழுதும் இருக்க மாட்டோம்.
எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!
எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது
பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!
இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது
அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹுல் புகாரி)

இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை கூறுவார்கள்.

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக் கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும் வீசும். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள். (ஸுனனுத் திர்மிதி, மிஷ்காத்)

மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவன் மனைவி ஒரு படி தொலி கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சுந்தித்து தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபின் வீட்டுக்கு வருகை தந்தார்கள். அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹுல் புகாரி)