பக்கம் - 34 -
மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கான்: உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன். அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.

அர்ராஃப்: தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன். எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!

முநஜ்ஜிம்: நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.

இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும். அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக, மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள். இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள். இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.

அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர். மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர். மேலும் ‘ஹாம்மா’ என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, “ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு “தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)