பக்கம் - 352 -
முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

இது அகழ் மற்றும் குரைளா போர்களுக்குப் பின் அனுப்பப்பட்ட முதல் படை. இப்படையில் முப்பது வீரர்கள் இருந்தனர்.

நஜ்து மாநிலத்திலுள்ள ‘பகராத்’ என்ற பகுதியில் ‘ழய்யா’ என்ற ஊர் வழியாக ‘கர்தா’ என்ற இடத்தை நோக்கி இப்படை புறப்பட்டது. ழய்யாவுக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள பயண தூரம் ஏழு இரவுகளாகும். இப்படையின் நோக்கம் அங்கு வசித்து வந்த பக்ர் இப்னு கிளாப் கிளையினரைத் தாக்குவதாகும். முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிரிகள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். முஸ்லிம்கள் அங்குள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு முஹர்ரம் பிறை இறுதியில் மதீனா வந்து சேர்ந்தனர்.

தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, சுமாமா இப்னு உஸால் என்பவரை நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து அனுப்பினான். இவர் ஹனீஃபா என்ற கிளையினரின் தலைவர் ஆவார். இவரை இப்படையினர் வழியில் கைது செய்து தங்களுடன் அழைத்து வந்தனர். (ஸீரத்துல் ஹல்பியா)

இவரை மதீனாவின் பள்ளியிலுள்ள ஒரு தூணில் முஸ்லிம்கள் கட்டிவிட்டனர். அவரை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து “சுமாமா நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “முஹம்மதே! என்னிடத்தில் நன்மை இருக்கிறது. நீர் என்னைக் கொலை செய்ய நாடினால் அத்தண்டனைக்குத் தகுதியான ஒருவரைத்தான் கொலை செய்தவராவீர்! நீர் எனக்கு உதவி செய்து என்னை விட்டுவிட்டால் உங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். உங்களுக்கு பொருள் வேண்டும் என்றால் என்னிடம் கேள். நீர் விரும்பிய அளவு நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று கூறினார். நபியவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டார்கள்.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் அவருக்கருகில் சென்ற போது அவரிடம் முன்னர் கேட்டது போல் கேட்கவே அவரும் முன்பு சொன்ன பதிலையே கூறினார். நபியவர்கள் அவரை அப்படியே விட்டுச் சென்று விட்டார்கள். மூன்றாவது முறை நபியவர்கள் அவர் அருகில் சென்று அதேபோன்று கேட்க அவரும் தனது பழைய பதிலையே திரும்பக் கூறினார். அப்போது நபியவர்கள் சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று தனது தோழர்களுக்குக் கூறவே, தோழர்கள் அவரை அவிழ்த்து விட்டார்கள். அவர் பள்ளிக்கு அருகிலிருந்த பேரீச்சம் பழ தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு நபியவர்கள் முன்னிலையில் இஸ்லாமை ஏற்றார்.

பின்பு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முன்போ இப்பூமியில் உங்களது முகத்தைவிட வெறுப்பான ஒரு முகம் எனக்கு இருந்ததில்லை. ஆனால், இன்று உங்களது முகமே முகங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாகி விட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்பூமியில் உங்களது மார்க்கத்தை விட வெறுப்பான மார்க்கம் எனக்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை. ஆனால், இப்போது உங்களது மார்க்கம் மார்க்கங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாக மாறிவிட்டது. உங்களின் படை என்னை கைது செய்த போது நான் உம்ராவிற்காக சென்று கொண்டிருந்தேன். நான் இப்போது என்ன செய்ய? என்று அவர் கேட்க, நபியவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, அவர் நாடி வந்த உம்ராவை முடித்து வருமாறு கூறினார்கள்.