பக்கம் - 372 -
நபி (ஸல்) அவர்களின் இப்பதிலைக் கேட்ட புதைல் “நீங்கள் கூறியதை நான் குறைஷிகள் முன் வைக்கிறேன்” என்று கூறி குறைஷிகளை சந்தித்தார். “குறைஷிகளே! நான் அந்த மனிதரிடம் இருந்து உங்களிடம் வந்திருக்கிறேன். அவர் கூறும் விஷயத்தையும் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நான் அதை உங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கிறேன்” என்றார். ஆனால், அவர்களில் சில அறிவீனர்கள், “அவர் சார்பாக நீ எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம். அது எங்களுக்குத் தேவையுமில்லை” என்று பேசினார்கள். ஆனால், சில அறிவாளிகள் “நீர் கேட்டு வந்ததை எங்களிடம் சொல்” என்றனர். நபியவர்களிடம் கேட்டு வந்ததை அவர் கூறவே, குறைஷிகள் ‘மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்’ என்பவனை நபியவர்களிடம் பேசிவர அனுப்பினர். அவன் வருவதைப் பார்த்த நபியவர்கள், “அவன் ஒரு மோசடிக்காரன்” என்று கூறினார்கள். அவன் நபியவர்களிடம் பேசிய போது புதைலுக்குக் கூறிய விஷயத்தையே அவனிடமும் கூறினார்கள். அவன் குறைஷிகளிடம் திரும்பி, தான் கேட்டு வந்த செய்தியைக் கூறினான்.

குறைஷிகளின் தூதர்கள்

கினானா கிளையைச் சேர்ந்த ஹுளைஸ் இப்னு அல்கமா என்பவர் “நான் அவரைச் சந்தித்து வருகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்று குறைஷிகளிடம் கூறினார். அவர்கள் அனுமதி தரவே அவர் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்து நபியவர்கள் “இவர் இன்னவர், இவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட மற்றும் ஹஜ், உம்ராவுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன் குர்பானி பிராணிகளை நிறுத்துங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே முஸ்லிம்கள் குர்பானி பிராணிகளை வரிசையாக நிறுத்தி தல்பியா” கூறியவர்களாக அவரை வரவேற்றனர். இதைப் பார்த்த அவர் “சுப்ஹானல்லாஹ்! இவர்களை அல்லாஹ்வின் வீட்டிலிருந்து தடுப்பது முறையல்ல” என்று கூறிவிட்டு தனது தோழர்களிடம் திரும்பி “நான் மாலையிடப்பட்டு அடையாள மிடப்பட்ட குர்பானிக்கான ஒட்டகங்களைப் பார்த்தேன். அவர்களைத் தடுப்பது எனக்கு சரியான தாகத் தெரியவில்லை” என்று கூறினார். இதற்குப் பின் அவருக்கும் குறைஷிகளுக்குமிடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

அங்கு வீற்றிருக்த உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி என்பவர், “இவர் உங்களுக்கு நல்ல கருத்தைக் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நானும் அவரிடம் சென்று பேசி வருகிறேன்” என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். அப்போது நபி (ஸல்) புதைலுக்கு கூறியதையே அவருக்கும் கூறினார்கள். அப்போது “முஹம்மதே! போர்தொடுத்து உனது இனத்தாரை வேரோடு அழிக்க வேண்டுமென்று நீ விரும்புகின்றாயா? உனது குடும்பத்தாருடன் போர் புரிவது நல்ல பழக்கமாகுமா? அரபிகளில் எவராவது தனது இனத்தாரை உனக்கு முன்பு வேரோடு வெட்டிச் சாய்த்தார் என்று நீ கேள்விப்பட்டதுண்டா? நீ விரும்பியபடி உனக்கு போரில் வெற்றி கிடைக்காமல் அதற்கு மாற்றமாக நீ தோல்வியடைந்தால், உன்னுடன் இருக்கும் இந்த வீணர்களான அற்பர்கள் உன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்” என்று உர்வா கூறினார்.