பக்கம் - 379 -
மேலும்,

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவதில்லை” என்றும், உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)

என்ற வசனத்தின் மூலம் ஹிஜ்ரா செய்து வந்த பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்தார்கள். “யார் திருமறையில் கூறப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களிடம் நான் உங்களது ஹிஜ்ராவை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறுவார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப மாட்டார்கள்.

இந்த வசனத்தில் இறக்கப்பட்ட சட்டத்தின்படி முஸ்லிம்கள் மக்காவிலிருந்த தங்களது இணைவைக்கும் மனைவிகளை விவாகரத்து செய்தனர். அன்றைய தினத்தில் உமர் (ரழி) இணைவைக்கும் தனது இரு மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவ்விருவல் ஒருவரை முஆவியாவும் இன்னொருவரை ஸஃப்வானும் மணம் முடித்துக் கொண்டனர். (அதுவரை முஆவியாவும் ஸஃப்வானும் இஸ்லாமைத் தழுவவில்லை.)

ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

இதுவரை ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையை நாம் பார்த்தோம். எவர் ஒருவர் இந்த அம்சங்களையும் அதன் பின்விளைவுகளையும் நன்கு ஆழமாக சிந்தித்துப் பார்ப்பாரோ அவர் இந்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றிதான் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வார். அதாவது, குறைஷிகள் முஸ்லிம்களின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டுமென்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். என்றாவது ஒரு நாள் அந்நோக்கம் நிறைவேறும் என்று எதிர் பார்த்திருந்தனர். முடிந்தளவு தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இஸ்லாமிய அழைப்புப் பணி மக்களை சென்றடையாமல் தடுத்தனர். அரபு தீபகற்பத்தில் அனைத்து அரபுகளின் உலக விஷயங்களுக்கும், மதக் காரியங்களுக்கும் தலைமைபீடமாக இருந்தனர்.