பக்கம் - 380 -
இறுதியாக, இவர்கள் சமாதான ஒப்பந்தத்திற்குப் பணிந்து வந்ததே முஸ்லிம்களின் ஆற்றலை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கும், இனி முஸ்லிம்களை எதிர்க்க குறைஷிகளிடம் ஆற்றல் இல்லை என்பதற்கும் தெளிவான ஆதாரமாகிவிட்டது. ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சத்தின் மூலம் குறைஷிகள் தங்களது உலக ரீதியான மற்றும் மத ரீதியான தலைமைத்துவத்தை மறந்து விட்டனர். இனி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் சுமையாகி விட்டது என்பதையும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம். ஏனைய மக்கள் மற்றும் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாலும் அதைப் பற்றி குறைஷிகள் இனி கவலைப்பட மாட்டார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். அது விஷயத்தில் எத்தகைய தலையீடும் செய்யமாட்டார்கள் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது குறைஷிகளைக் கவனித்துப் பார்க்கும் போது மிகப்பெரிய தோல்வியும், முஸ்லிம்களைக் கவனித்துப் பார்க்கும்போது மிகப் பெரும் வெற்றியாகவும் அமைந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்!

முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் என்னவெனில், மார்க்கம் மற்றும் கொள்கை விஷயத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட இ(ந்த வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.) (அல்குர்ஆன் 18:29)

தாங்கள் நாடும் நோக்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் எந்த சக்தியும் குறுக்கிடக் கூடாது என்பதுவே ஆகும். ஆம்! முழுமையாக அந்நோக்கம் இந்த எளிமையான சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்தது. ஒருவேளை மாபெரும் போர் நடந்து அதில் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நோக்கம் இந்தளவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. அல்லாஹ்வின் அருளால் இச்சுதந்திரத்தால் முஸ்லிம்களுக்கு அழைப்புப் பணியில் பெரும் முன்னேற்றமும் வெற்றியும் கிடைத்தது. இந்த ஒப்பந்தத்திற்கு முன் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது, முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரமாக ஆகியது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சம் (பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது) முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் இரண்டாவது பகுதியாகும். அதாவது, முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அல்லாஹ் தனது திருமறையில்:

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரை விட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் 9:13)

என்று குறிப்பிடுகின்றான்.