பக்கம் - 385 -

புதிய சகாப்தம்

ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.

இஸ்லாமிற்குக் குறைஷிகள்தான் முதல் எதிரி மட்டுமின்றி. அதற்குப் பெரும் தொல்லை தந்து வந்த வம்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களுடன் போர் புரிவதிலிருந்து விலகி சமாதானம் மற்றும் அமைதியின் பக்கம் திரும்பி விட்டதால் இஸ்லாமின் மாபெரும் மூன்று எதிரிக் கூட்டங்களின் வலிமை வாய்ந்த ஒரு பகுதி ஒடிந்து விட்டது.

அதாவது குறைஷிகள், கத்ஃபான் கிளையினர், யூதர்கள் ஆகிய இம்மூன்று கூட்டத்தினர் அரேபிய தீபகற்பத்தில் சிலை வழிபாட்டுக்கும், அதில் ஈடுபடுபவர்களுக்கும் தலைவர்களாகவும் அவர்களை வழிநடத்துபவர்களாகவும் இருந்தனர். எனவே, குறைஷிகள் பணிந்து விட்டதால் அரேபிய தீபகற்பத்திலுள்ள சிலை வணங்குபவர்களின் உணர்ச்சிகளும் எதிர்ப்புகளும் பெருமளவு மழுங்கி விட்டன. ஆகவேதான், இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கத்ஃபான் கிளையினர் பெரிய அளவிற்கு சண்டையில் ஈடுபடவில்லை. யூதர்களின் தூண்டதலினால்தான் அவர்கள் சில சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டார்களே தவிர தாங்களாகவே அதில் ஈடுபட்டதில்லை.

மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் யூத விஷமிகள் தங்களின் சதித்திட்டங்களைத் தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் கைபரைக் கேந்திரமாக ஆக்கிக் கொண்டு தங்களின் நாசவேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். மதீனாவைச் சுற்றி பல இடங்களில் பரவியிருந்த கிராம அரபிகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக அல்லது அவர்களுக்குச் சேதம் உண்டாக்கு வதற்காக பல இரகசிய சதித்திட்டங்களைத் தீட்டினர். இதனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எடுத்த முதல் கட்ட நடவடிக்கை, இந்த யூதக் கேந்திரங்களின் மீது தீர்க்கமான போரைத் தொடுப்பதாகும்.

இந்தச் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் தொடங்கிய இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், அதை மக்கள் முன் வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விட பல மடங்கு ஆர்வத்தை இப்பணியில் ஆர்வம் காட்டினர். ஆகவே, இக்காலக் கட்டத்தை நாம் இரண்டு வகையாக பிரிக்கின்றோம்.

1) அழைப்புப் பணியில் ஆர்வம் காட்டுதல் - அரசர்கள், கவர்னர்களுக்கு கடிதங்கள் எழுதுதல்.

2) போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

அரசர்கள், கவர்னர்களுடன் நபியவர்கள் கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றி முதலில் கூற விரும்புகிறோம். ஏனெனில், இஸ்லாமிய அழைப்புப் பணிதான் அனைத்திலும் முக்கியமான அடிப்படை நோக்கமாகும். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்தத் துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.