பக்கம் - 412 -
ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நாயிம், ஸஅப் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டதற்குப் பின் நதா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேறி ஜுபைர் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். இக்கோட்டை ஒரு மலை உச்சியில் அமைந்திருந்ததுடன், மிக வலிமை மிக்கதாகவும் இருந்தது. அம்மலை மீது குதிரை வீரர்களோ காலாட் படையினரோ ஏறிச் செல்வது சிரமமாக இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அக்கோட்டையை முற்றுகையிடுவதில் ஈடுபட்டார்கள். இந்த முற்றுகை மூன்று நாட்கள் நீடித்தது.

அப்போது யூதர்களில் ஒருவன் நபியவர்களிடம் வந்து “ஓ அபுல் காசிமே! நீங்கள் இவ்வாறு ஒரு மாத காலம் இவர்களை முற்றுகையிட்டாலும் இவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இப்பூமிக்கு கீழ் அவர்கள் குடிப்பதற்குத் தேவையான நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவர்கள் இரவில் கோட்டையிலிருந்து வெளியேறி தேவையான நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் கோட்டைக்குள் சென்று விடுகின்றனர். எனவே, இவர்கள் தண்ணீர் பிடிக்க வருவதை தடுத்தால் தான் மைதானத்தில் உங்களுடன் போர் செய்ய இறங்குவார்கள்” என்று ஆலோசனைக் கூறினார். அவன் யோசனைக்கிணங்க நபியவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைத் தடுத்து விட்டார்கள். இதனால் யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி, முஸ்லிம்களுடன் கடுமையான யுத்தம் புரிந்தார்கள். போரில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் பத்து யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் கோட்டையை வெற்றி கொண்டனர்.

உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்

ஜுபைர் கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் அங்கிருந்து யூதர்கள் வெளியேறி உபை கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக “தன்னிடம் சண்டை செய்பவர்கள் யார்?” என்று மைதானத்தில் இறங்கினர். அவ்விருவரையும் முஸ்லிம் வீரர்கள் வெட்டிச் சாய்த்தனர். அதில் இரண்டாவதாக வந்த யஹுதியைச் சிவப்பு தலைப்பாகை உடைய அபூதுஜானா ஸிமாக் இப்னு கரஷா (ரழி) என்ற வீரத்தில் பிரசித்தி பெற்ற நபித்தோழர் வெட்டி வீழ்த்தினார். இரண்டாவது வீரனை வெட்டிய பின் அபூதுஜானா (ரழி) கோட்டைக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் முஸ்லிம் வீரர்களும் அதற்காக முயற்சித்தனர். அந்நேரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. பின்பு அங்கிருந்து யூதர்கள் தப்பித்து ‘நஜார்’ கோட்டைக்குச் சென்றனர். பிறகு இந்த உபை கோட்டையும் முஸ்லிம்கள் வசமானது.


நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நத்தா பகுதியிலிருந்த கோட்டைகளில் மிக வலிமையானது இக்கோட்டையே ஆகும். எவ்வளவு முயற்சி செய்தாலும், உயிர் தியாகம் செய்தாலும் முஸ்லிம்களால் இக்கோட்டையை வெற்றி கொள்ள முடியாது என்று யூதர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவேதான் இக்கோட்டையில் தங்களது மனைவி மக்களை தங்க வைத்திருந்தனர். மேற்கூறிய நான்கு கோட்டைகள் எதிலும் தங்களது மனைவி மக்களைத் தங்க வைக்கவில்லை.

இக்கோட்டையைச் சுற்றி முஸ்லிம்கள் முற்றுகையிட்டு யூதர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இக்கோட்டை உயரமான மலை மீது இருந்ததால் முஸ்லிம்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவு இல்லாமல் கோட்டையை விட்டு வெளியே வராமலிருந்தனர். கோட்டைக்குள் இருந்தவாறே முஸ்லிம்கள் மீது அம்புகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.