பக்கம் - 431 -
படையை வழியனுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்

இஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழலானார். “மக்கள் ஏன் அழுகிறீர்?” என்று கேட்க, “எனக்கு உலகத்தின் மீதுள்ள ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும், நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான் கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:

அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)

அந்தப் பாலத்தை கடக்கும் போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். “அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!” என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:

மன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி
அல்லது இரத்தவெறி கொண்ட
ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்
ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்
நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.
என் மண்ணறையருகே நடப்போர்,
“அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே!
நேர்வழி பெற்றவரே!’ என்று சொல்ல வேண்டும்.

பின்பு நபியவர்களும் மக்களும் ‘ஸனியத்துல் விதா’ என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்

ஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு ‘மஆன்’ என்ற இடத்தை அடைந்தது. “பல்கா மாநிலத்தின் ‘மாப்’ என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா, பலிய் ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.