பக்கம் - 432 -
ஆலோசனை சபை

இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம் அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.

ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: “எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்.”

இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர்.

எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்படுகிறது

‘மஆன்’ என்ற இடத்தில் இரண்டு நாட்கள் கழித்த பின் முஸ்லிம்கள் எதிரிகளின் நாட்டை நோக்கிப் புறப்பட்டனர். இறுதியாக, பல்காவின் கிராமங்களில் ஒன்றான ‘மஷாஃப்’ என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. எதிரிகள் நெருங்கி வர முஸ்லிம்கள் சற்று பின்வாங்கி ‘முஃதா’ என்ற இடம் வந்து அங்கு தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர். அங்கிருந்து போருக்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள், படையின் வலப்பக்கத்திற்கு குத்பா இப்னு கதாதாவை தளபதியாகவும், இடப்பக்கத்திற்கு உபாதா இப்னு மாலிக்கை தளபதியாகவும் ஆக்கினர்.

யுத்தத்தின் ஆரம்பம்

‘முஃதா’ என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர். என்ன ஆச்சரியம்! உலகமே திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தது. ஆம்! ஈமானியப் புயல் வீச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆச்சரியங்கள் நடக்கும்.

நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம் எய்தினார்.

அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது ‘ஷக்ரா’ என்ற குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது. கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார். பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.