பக்கம் - 533 -
ஜைனபை நபி (ஸல்) திருமணம் செய்த பின்பு இத்திருமணம் குறித்து நயவஞ்சகர்கள் பல தவறான பொய்ப் பிரச்சாரங்களை மக்களுக்கிடையில் பரப்பினர். இறைநம்பிக்கையில் உறுதியற்ற முஸ்லிம்களின் இதயங்களில் தீய எண்ணங்கள் உண்டாயின.

இத்திருமணத்தால் இரண்டு விதமான குழப்பங்களை நயவஞ்சகர்கள் உண்டாக்கினர். 1) நபி (ஸல்) அவர்களுக்கு இது ஐந்தாவது திருமணமாக இருந்தது. (நான்கிற்கு மேல் திருமணம் முடிப்பது அனுமதியில்லை என முஸ்லிம்கள் அறிந்திருந்தனர்.) 2) ஜைது (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன். அவர் நபி (ஸல்) அவர்களின் மகனாகவே கருதப்பட்டு வந்தார். இதைச் சொந்த மகனின் மனைவியைச் சொந்தத் தந்தை மணமுடிப்பதைப் போன்று மானக்கேடான செயலாகக் கருதினர். அல்லாஹு தஆலா இவ்விரண்டையும் குறித்து தௌ;ளத் தெளிவான பதிலை சூரா அஹ்ஜாபில் இறக்கி வைத்தான். அதன் மூலம் ‘ஒருவரை வளர்ப்பு மகனாக ஆக்குவது மார்க்க சட்டத்தில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது’ என்றும் ‘நபி (ஸல்) அவர்களுக்கு பல உன்னத நோக்கங்களுக்காக ஏனைய முஸ்லிம்களைவிட திருமண விஷயத்தில் சிறப்புச் சலுகையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்’ என்றும் முஸ்லிம்கள் புரிந்துகொண்டனர்.

நபி (ஸல்) தங்களது மனைவிமார்களுடன் மிக அழகிய முறையில் உயர்ந்த பண்புகளுடனும் சிறந்த குணங்களுடனும் வாழ்க்கை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் அவ்வாறே உயர்ந்த குணங்களும் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தனர். பொது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் வாழ்ந்தும், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்து நல்ல மனைவியர்களாகத் திகழ்ந்தார்கள்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அல்லாஹ்விடம் சென்றடையும் வரை மெல்லிய ரொட்டியை அவர்கள் பார்த்ததாக எனக்குத் தெரியாது. பொறித்த ஆட்டுக் கறியை நபி (ஸல்) சுவைத்ததே இல்லை. (ஸஹீஹுல் புகாரி)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விட்டோம். நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை.” உர்வா, “நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டார். அதற்கு, “பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்” என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். இதுபோன்ற அநேக சம்பவங்கள் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளன. (ஸஹீஹுல் புகாரி)