பக்கம் - 540 -
அலீ (ரழி) கூறுகிறார்கள்: போர் சூடுபிடித்து கண்கள் சிவந்து விடும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கருகே சென்று எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். எதிரிகளுக்கு அருகில் நபி (ஸல்) அவர்களைத் தவிர எங்களில் எவரும் நெருக்கமாக இருந்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: மதீனாவாசிகள் ஒரு நாள் இரவு சப்தத்தைக் கேட்டு பயந்து விட்டனர். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து செல்கையில் அதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கழுத்தில் வாளை தொங்கவிட்டுக் கொண்டு அபூ தல்ஹாவுக்குரிய குதிரையில் எவ்வித சேனம் கடிவாளம் ஏதுமின்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து “நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மிகக் கூச்சச் சுபாவமுள்ளவராக இருந்தார்கள்.

அபூ சயீத் குத் (ரழி) கூறுகிறார்கள்: திரை மறைவிலுள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணமுள்ளவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். ஏதாவது பிடிக்காவிட்டால் அதை அவர்களது முகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். எவரது முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ்நோக்கி வைத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மேல் நோக்கி பார்ப்பதை விட கீழ்நோக்கி பார்ப்பதே அதிகம். பெரும்பாலும் கடைக்கண்ணால் பார்ப்பார்கள். வெட்கத்தினாலும் உயர்ந்த பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி தங்களுக்குக் கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் “சிலர் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்பார்கள். அவருடைய பெயரைக் குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

“நாணத்தால் பார்வையைத் தாழ்த்துகிறார்!
அவர் மீது பயத்தால் பார்வை குனிகிறது.
அவர் புன் முறுவல் பூத்தால்தான் அவருடன் பேச முடியும்.”

என்ற ஃபரஸ்தக்கின் கவிக்கு நபி (ஸல்) அவர்களே மிகத் தகுதியுள்ளவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களில் “மிக்க நீதவானாக, ஒழுக்க சீலராக, உண்மையாளராக, நம்பிக்கையாளராகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இப்பண்புகளை உடன் இருந்தவர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட நன்கு அறிந்து வைத்திருந்தனர். நபித்துவம் கிடைக்கும் முன்பே அவர்களை ‘நம்பிக்கைக்குரியவர் (அல் அமீன்)’ என்று மக்கள் அழைத்தனர். இஸ்லாம் வருவதற்கு முன்பே அறியாமைக் காலத்தில் கூட மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு நாடி அவர்களிடம் வருவார்கள்.