பக்கம் -28-

12 தலைவர்கள்

மேற்கூறப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் 12 தலைவர்களை தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். தங்களது கூட்டத்தினரை கண்காணிப்பதும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றத் தூண்டுவதும் அந்தத் தலைவர்களின் பணியாக இருந்தது.

மதீனாவாசிகள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களையும், அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களையும் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.

கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ்

2) ஸஅது இப்னு ரபீஃ இப்னு அம்ரு

3) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இப்னு ஸஃலபா

4) ராஃபிஃ இப்னு மாலிக் இப்னு அஜ்லான்

5) பராஃ இப்னு மஃரூர் இப்னு ஸக்ர்

6) அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம்

7) உபாதா இப்னு ஸாபித் இப்னு கய்ஸ்

8) ஸஃது இப்னு உபாதா இப்னு துலைம்

9) முன்திர் இப்னு அம்ரு இப்னு குனைஸ் (ரழியல்லாஹு அன்ஹும்).

அவ்ஸ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) உஸைத் இப்னு ஹுழைர் இப்னு சிமாக்

2) ஸஅது இப்னு கைஸமா இப்னு ஹாரிஸ்

3) ஃபாஆ இப்னு அப்துல் முன்திர் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹும்).

இந்தத் தலைவர்களிடம் அவர்கள் தலைவர்கள் என்ற அடிப்படையில் மற்ற சில உடன்படிக்கையையும் நபி (ஸல்) வாங்கினார்கள்.

அதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)

ஷைத்தான் கூச்சலிடுகிறான்

நள்ளிரவில் இரகசியமாக நடைபெற்ற உடன்படிக்கை முழுமையாக நிறைவுபெற்று, கூட்டத்தினர் அனைவரும் பிரிந்து செல்ல இருக்கும் நேரத்தில், ஷைத்தான்களில் ஒருவனுக்கு அந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெரிய வந்தவுடன் அதைப் பகிரங்கப்படுத்துவதற்காக கூச்சலிட்டான். கடைசி தருணத்தில்தான் அவனுக்கு உடன்படிக்கை தெரியவந்ததால் குறைஷி தலைவர்களுக்கு இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, முஸ்லிம்கள் ஒன்று சேர்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவில்லை. உடனடியாக அந்த ஷைத்தான் அங்குள்ள ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றுகொண்டு மிக பயங்கரமான சப்தத்தில் “ஓ! கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே! இதோ இந்த இழிவுக்குரியவரையும் அவருடன் மதம்மாறி சென்றவர்களையும் நீங்கள் பார்க்க வேண்டாமா? இவர்களெல்லாம் உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென ஒன்றுகூடி இருக்கின்றனர்” என்று கூச்சலிட்டான்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவன் இந்தக் கணவாயின் ஷைத்தான்” என்று கூறி அந்த ஷைத்தானை நோக்கி “ஏய் அல்லாஹ்வின் எதிரியே! அதிவிரைவில் நான் உனது கணக்கை முடித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் அவரவர் கூடாரங்களுக்குக் கலைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். (இப்னு ஹிஷாம்)

இந்த ஷைத்தானின் பேச்சைக் கேட்ட அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நள்லா “உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நீங்கள் விரும்பினால் நாளை இங்கு தங்கியிருக்கும் மினாவாசிகள் அனைவர் மீதும் நாங்கள் வாளேந்தி போர் தொடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நமக்கு அவ்வாறு கட்டளை இடப்படவில்லை. இப்போது நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்று தங்களது கூட்டத்தினருடன் உறங்கிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)

குறைஷிகளின் எதிர்ப்பு

இந்த உடன்படிக்கையின் செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியவுடன் அவர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களைத் துக்கங்களும் கவலைகளும் ஆட்கொண்டன. இதுபோன்ற உடன்படிக்கை ஏற்பட்டால் அதன் முடிவுகளும் விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை குறைஷிகள் நன்கு அறிந்திருந்ததால் நிலைமை என்னவாகுமோ என்று பயந்து சஞ்சலத்திற்கு உள்ளாயினர். எனவே, அதிகாலையில் மக்காவாசிகளுடைய தலைவர்களின் ஒரு மாபெரும் குழு இவ்வுடன்படிக்கைக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவிப்பதற்காக மதீனாவாசிகளிடம் வந்தனர்.

“கஸ்ரஜ் கூட்டத்தினரே! எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரை எங்களிடமிருந்து வெளியேற்ற விரும்புகின்றீர்களா? எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கும் நமக்கும் மத்தியில் போரை நாங்கள் அறவே விரும்பவில்லை” என்று அந்தக் குழு மதீனாவாசிகளிடம் கூறினர். (இப்னு ஹிஷாம்)

இந்த உடன்படிக்கை இரவின் இருளில் மிக இரகசியமாக நடைபெற்று இருந்ததால் மதீனாவாசிகளில் இணைவைப்பவர்களாக இருந்தவர்களுக்கு இவ்வுடன்படிக்கையைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே, அவர்கள் குழம்பிவிட்டனர். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மதீனாவைச் சேர்ந்த இணைவைப்பவர்கள் மறுத்தனர். மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலிடம் விசாரித்தனர். அதற்கு, “இது முற்றிலும் பொய்யான செய்தி. நான் மதீனாவில் இருந்திருந்தால் கூட எனது கூட்டத்தினர் என்னிடம் ஆலோசனை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள். நான் இங்கு இருக்கும்போது எனக்குத் தெரியாமல் இது போன்று அவர்கள் ஒருக்காலும் செய்திருக்கவே மாட்டார்கள்” என்று அவன் கூறினான்.

முஸ்லிம்களோ தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் வாய்மூடி இருந்துவிட்டனர். குறைஷித் தலைவர்கள் மதீனா முஷ்ரிக்குகளின் பேச்சை நம்பி, தோல்வியுடன் திரும்பினர்.

குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

மதீனாவாசிகளைப் பற்றி கேள்விப்பட்ட செய்தி பொய்யாக இருக்குமோ என்று சற்றே உறுதியான எண்ணத்தில்தான் அவர்கள் திரும்பினர். ஆனாலும், அதைப் பற்றி துருவித் துருவி ஆராய்ந்து, விசாரித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில், தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான், இரவிலேயே ஒப்பந்தம் முழுமை அடைந்து விட்டது என்று அறிந்து கொண்டனர். உடனே, மதீனாவாசிகளை விரட்டிப் பிடிப்பதற்காக குறைஷிகளின் குதிரை வீரர்கள் தங்களது குதிரைகளை வெகு விரைவாக செலுத்தினர். ஆனால், அவர்களை அடைந்துகொள்ள முடியவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மதீனாவாசிகள் வெகு விரைவாக தங்களது நாடுகளை நோக்கி பயணமாகி விட்டனர். ஆனால், பயணக் கூட்டத்தின் கடைசியாக சென்று கொண்டிருந்த ஸஅது இப்னு உபாதாவையும், முன்திர் இப்னு அம்ரையும் குறைஷிகள் பார்த்து விட்டனர். அவர்கள் இருவரையும் பிடிக்க முயலவே முன்திர் விரைந்து சென்று தப்பித்துக் கொண்டார். ஸஅது (ரழி) குறைஷிகளின் கையில் சிக்கிக் கொண்டார். அந்தக் குறைஷிகள் அவரை அவரது வாகனத்தின் கயிற்றைக் கொண்டு கையை கழுத்துடன் கட்டி, அடித்து, தலைமுடியைப் பிடித்து இழுத்தவர்களாக மக்காவுக்கு அழைத்து வந்தனர். இதைப் பார்த்த முத்யீம் இப்னு அதீயும், ஹாரிஸ் இப்னு ஹர்ப் இப்னு உமைய்யாவும் ஸஅதை குறைஷிகளின் பிடியிலிருந்து விடுவித்தனர். ஏனெனில், முத்” மற்றும் ஹாரிஸின் வியாபாரக் கூட்டங்கள் மதீனாவைக் கடந்து செல்லும்போது அக்கூட்டங்களுக்கு ஸஅது (ரழி) அவர்கள்தான் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். இதற்கிடையில் தங்களுடன் ஸஅதைப் பார்க்காத அன்சாரிகள் அவரைக் காப்பாற்றி அழைத்து வருவதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தபொழுது ஸஅது (ரழி) குறைஷிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிடவே அனைவரும் மதீனா சென்று விட்டனர். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இதுதான் அகபாவின் இரண்டாவது உடன்படிக்கை ஆகும். இதற்கு ‘அகபாவின் மாபெரும் உடன்படிக்கை’ என்றும் பெயர் கூறப்படும். இந்த உடன்படிக்கை அன்பு, ஆதரவு என்ற உணர்ச்சிகளுடனும், முஸ்லிம்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பினும் தங்களுக்குள் உதவி, ஒத்தாசை செய்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் வழியிலே தங்களது வீரத்தையும், உறுதியையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகளுடனும் நிறைவு பெற்றது. மதீனாவில் வாழும் ஒரு முஸ்லிம் மக்காவில் வாழும் பலவீனமான தன் சகோதர முஸ்லிம் மீது இரக்கம் காட்டுகிறார் அவருக்காக உணர்ச்சி வசப்படுகிறார் அவர் மீது அநியாயம் செய்பவர்களை வெறுக்கிறார் தனது முஸ்லிமான சகோதரர் தன்னைவிட்டு மறைந்திருந்தாலும் அல்லாஹ்விற்காக அவர் மீது அன்பின் உணர்வுகள் இவரது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்றன. இந்த உணர்வுகளும், உணர்ச்சிகளும் காலத்தால் நீங்கிவிடக்கூடியதல்ல. ஏனெனில், இதன் பிறப்பிடம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது வேதத்தையும் நம்பிக்கை கொண்டதால் உருவானதாகும்.

இந்த இறைநம்பிக்கையை உலகத்தின் எந்த ஓர் அநியாயமான அல்லது வரம்புமீறிய சக்தியாலும் நீக்கிவிட முடியாது. இந்த இறைநம்பிக்கை எனும் புயல் வீச ஆரம்பித்தால் கொள்கையிலும், செயல்களிலும் வியக்கத்தக்க மாபெரும் ஆச்சரியங்களைப் பார்க்கலாம். இந்த ஈமானை (இறைநம்பிக்கையை) அடைந்ததின் மூலமாகத்தான் முஸ்லிம்கள் வரலாற்றுப் பக்கங்களில் தங்களது செயல்களைப் பதித்து மாறாத அடிச்சுவடுகளை விட்டுச் செல்ல முடிந்தது. அதுபோன்ற வீரச்செயல்களும், அடிச்சுவடுகளும் கடந்த காலத்திலும் இல்லை தற்காலத்திலும் இல்லை இனிவரும் காலங்களிலும் இருக்காது.

முந்திய பக்கம் குர்ஆனில் தேடுங்கள் அடுத்த பக்கம்