அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உதாரணமாவது, ஒரு மனிதரின் உதாரணத்தைப் போன்றது. அவர் ஒரு கூட்டத்தாரை, பகலிலிருந்து இரவு வரை ஒரு குறிப்பிட்ட கூலிக்காகத் தனக்கு வேலை செய்ய அமர்த்தினார். அவர்கள் நண்பகல் வரை அவருக்காக வேலை செய்தார்கள். பிறகு, 'எங்களுக்காக நீர் நிர்ணயித்த உமது கூலி எங்களுக்குத் தேவையில்லை; நாங்கள் செய்த வேலையும் (எங்களுக்குப்) பயனற்றது' என்று கூறினர். அதற்கு அவர், 'அவ்வாறு செய்யாதீர்கள்; உங்களின் மீதமுள்ள வேலையைப் பூர்த்தி செய்துவிட்டு, உங்களுக்கான முழுக்கூலியையும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஆனால் அவர்கள் மறுத்து, (வேலையைக்) கைவிட்டனர்.
பிறகு அவர்களுக்குப் பின் அவர் இரு பணியாளர்களை (வேலைக்கு) அமர்த்தினார். அவர்களிடம், 'இன்றைய தினத்தின் எஞ்சிய நேரம் முடியும் வரை வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்; அவர்களுக்கு (முதல் சாராரருக்கு) நான் நிபந்தனையிட்ட கூலி (முழுவதும்) உங்களுக்கே கிடைக்கும்' என்று கூறினார். அவர்கள் அஸ்ர் தொழுகை நேரம் வரை வேலை செய்தார்கள். (பிறகு), 'நாங்கள் செய்த வேலை உமக்கே வீணாகட்டும்; நீர் எமக்காக நிர்ணயித்த கூலியும் உமக்கே இருக்கட்டும்' என்று கூறினர். அதற்கு அவர், 'உங்களின் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள். பகலில் எஞ்சியிருப்பது சிறிது நேரமே' என்று கூறினார். அவ்விருவரும் மறுத்துவிட்டனர்.
பிறகு அவர் (வேறொரு) கூட்டத்தாரை, பகலின் எஞ்சிய பகுதிக்குத் தமக்கு வேலை செய்ய அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும் வரை பகலின் எஞ்சிய பகுதியில் வேலை செய்தார்கள். மேலும் அவர்கள் (முந்தைய) இரு சாராரின் கூலியையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டார்கள். இதுவே அவர்களின் (முஸ்லிம்களின்) உதாரணமும், இந்த ஒளியிலிருந்து (மார்க்கத்திலிருந்து) அவர்கள் ஏற்றுக்கொண்டதன் உதாரணமும் ஆகும்.