என் தந்தை கூறினார்கள்: “அம்ர் பின் அபீ ஹஸன் அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் உளூவைப் பற்றி கேட்டதை நான் பார்த்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு (செய்து காட்டுவதற்காக) உளூச் செய்தார்கள்.
அவர்கள் (முதலில்) தமது கைகளின் மீது (நீரைச்) சாய்த்து, அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு அவர்கள் தமது கையை பாத்திரத்தினுள் விட்டு, மூன்று அள்ளுத் தண்ணீரால் மூன்று முறை வாய் கொப்பளித்து, மூக்கினுள் தண்ணீர் செலுத்தி, பிறகு (மூக்கை)ச் சிந்தினார்கள். பிறகு அவர்கள் தமது கையை பாத்திரத்தினுள் விட்டு, தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு அவர்கள் தமது கையை பாத்திரத்தினுள் விட்டு, தமது கைகளை முழங்கைகள் வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு அவர்கள் தமது கையை பாத்திரத்தினுள் விட்டு, தமது தலைக்கு மஸ்ஹு செய்தார்கள்; (அப்போது) கைகளை முன்புறத்திற்குக் கொண்டுவந்து பின்னர் பின்புறத்திற்குக் கொண்டு சென்றார்கள். பிறகு அவர்கள் தமது கையை பாத்திரத்தினுள் விட்டு, தமது கால்களைக் கழுவினார்கள்.”
வுஹைப் அவர்களின் அறிவிப்பில், "(நபி (ஸல்) அவர்கள்) தமது தலைக்கு ஒரு முறை மஸ்ஹு செய்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
(அவருடைய தந்தையின் வாயிலாக) என்னுடைய மாமா அளவு கடந்து உளூ செய்பவராக இருந்தார்கள். ஒருமுறை அவர்கள், `அப்துல்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூ செய்வதை தாம் கண்டார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டார்கள். `அப்துல்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதிலிருந்து தம் கைகளில் தண்ணீரை ஊற்றி மூன்று முறை அவற்றைக் கழுவினார்கள். பிறகு தம் கையை அந்தப் பாத்திரத்தினுள் செலுத்தி, ஒரே கையளவு தண்ணீரால் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி (பின்) அதை வெளியே சிந்தினார்கள்; இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். மீண்டும் அவர் தண்ணீருக்குள் தம் கையை விட்டு, ஒரு கையளவு தண்ணீர் எடுத்து, தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கைகளை முழங்கைகள் வரை இருமுறை கழுவினார்கள். தம் கையால் தண்ணீர் எடுத்து, தம் தலையில் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகவும், பின்னர் பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாகவும் மஸஹ் செய்தார்கள். பிறகு தம் பாதங்களை (கணுக்கால்கள் வரை) கழுவினார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே உளூ செய்வதை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவரிடம் (மக்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தது போல் எங்களுக்காக உளூச் செய்து காட்டுங்கள்" என்று கூறினார்கள். அவர் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து தம் கைகளில் (தண்ணீரைச்) சாய்த்து, அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து (தண்ணீரை) வெளியே எடுத்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி (சிந்தினார்கள்); (இவைகளை) ஒரே கைப்பிடி(த் தண்ணீரில்) செய்தார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் இரு கைகளையும் முழங்கை வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் தலையைத் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்); அப்போது தம் கைகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் கொண்டு சென்றார்கள். பிறகு தம் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ இவ்வாறுதான் இருந்தது" என்று கூறினார்கள்.