நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவரிடம் (மக்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தது போல் எங்களுக்காக உளூச் செய்து காட்டுங்கள்" என்று கூறினார்கள். அவர் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து தம் கைகளில் (தண்ணீரைச்) சாய்த்து, அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து (தண்ணீரை) வெளியே எடுத்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி (சிந்தினார்கள்); (இவைகளை) ஒரே கைப்பிடி(த் தண்ணீரில்) செய்தார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் இரு கைகளையும் முழங்கை வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் தலையைத் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்); அப்போது தம் கைகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் கொண்டு சென்றார்கள். பிறகு தம் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ இவ்வாறுதான் இருந்தது" என்று கூறினார்கள்.