ஒரு வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குத்பா நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் மஸ்ஜிதிற்குள் நுழைந்தார். அவரிடம் நபியவர்கள், "(பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் தொழும்) இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்" என்று கூறினார்கள். பிறகு, அடுத்த வெள்ளிக்கிழமையன்று அவர் வந்தபோதும், நபி (ஸல்) அவர்கள் குத்பா நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவரிடம் நபியவர்கள், "(பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் தொழும்) இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்" என்று கூறினார்கள். பிறகு, மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று அவர் வந்தார். அவரிடம் நபியவர்கள், "(பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் தொழும்) இரண்டு ரக்அத்கள் தொழுங்கள்" என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள், "(ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். எனவே, மக்கள் தர்மம் செய்தார்கள். நபியவர்கள் அந்த மனிதருக்கு இரண்டு ஆடைகளை வழங்கினார்கள். பிறகு நபியவர்கள், "(மீண்டும் ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர் (நபியவர்கள் வழங்கிய) தனது இரண்டு ஆடைகளில் ஒன்றை வீசினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரை நீங்கள் பார்க்கவில்லையா? இவர் ஓர் ஏழ்மையான தோற்றத்தில் மஸ்ஜிதிற்குள் நுழைந்தார். நீங்கள் அவரைக் கவனித்து, அவருக்கு தர்மம் செய்வீர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே நான், '(ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்' என்று கூறினேன். நீங்கள் தர்மம் செய்தீர்கள்; நான் அவருக்கு இரண்டு ஆடைகளைக் கொடுத்தேன். பிறகு நான், '(மீண்டும் ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்' என்று கூறினேன்; அவரும் (நான் வழங்கிய) தனது இரண்டு ஆடைகளில் ஒன்றை வீசினார். உமது ஆடையை எடுத்துக்கொள்" என்று கூறி, அவரை நபியவர்கள் கண்டித்தார்கள்.