அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மிகக் கடுமையான வெப்பம் கொண்ட ஒரு நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் தொழுதார்கள். (மக்கள்) கீழே விழும் அளவிற்குத் தமது நிலையை (கியாமை) நீண்ட நேரம் ஆக்கினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். பிறகு (தலையை) உயர்த்திய பின் நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு (மீண்டும்) ருகூஃ செய்தார்கள்; நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். பிறகு (தலையை) உயர்த்திய பின் நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (இரண்டாம் ரக்அத்திற்கு) எழுந்து நின்று, அதுபோன்றே செய்தார்கள். ஆகவே, (மொத்தம்) நான்கு ருகூஃகளும் நான்கு சஜ்தாக்களும் அமைந்தன.
பிறகு அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் நுழையவிருக்கும் ஒவ்வொன்றும் எனக்கு (இப்போது) எடுத்துக் காட்டப்பட்டன. சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது. அதில் ஒரு (திராட்சைக்) குலையை நான் பற்றிக்கொள்ள முயன்றிருந்தால், அதை நான் எடுத்திருப்பேன்" -அல்லது "நான் அதை எட்ட முயன்றேன்; ஆனால் என் கை அதை எட்டவில்லை" என்று கூறினார்கள். "நரகமும் எனக்குக் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கண்டேன். ஒரு பூனையின் விஷயத்தில் அவள் வேதனை செய்யப்பட்டாள். அவள் அதைக்கட்டி வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவளிக்கவுமில்லை; பூமியிலுள்ள பூச்சிகளைத் தின்பதற்கேனும் அதை அவள் விட்டுவிடவுமில்லை. மேலும், அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் (என்பவர்) நரகத்தில் தம் குடல்களை இழுத்துக்கொண்டு திரிவதை நான் கண்டேன்."
"மேலும், சூரியனும் சந்திரனும் ஏதேனும் ஒரு பெரிய மனிதரின் மரணத்தின் போதுதான் கிரகணம் அடைகின்றன என்று (அக்கால மக்கள்) கூறிவந்தனர். (அப்படியல்ல;) அவையிரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். அல்லாஹ் உங்களுக்கு அவற்றை (அடையாளமாகக்) காட்டுகிறான். ஆகவே, கிரகணம் பிடிப்பதைப் பார்த்தால் அது விலகும்வரை தொழுங்கள்."
(அறிவிப்பாளர்) ஹிஷாம் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் வரும் மற்றோர் அறிவிப்பில், "(நரகத்தில்) ஹிம்யர் குலத்தைச் சேர்ந்த, கருப்பான, உயரமான ஒரு பெண்ணைக் கண்டேன்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் "பனூ இஸ்ராயீல் குலத்தைச் சேர்ந்தவள்" என்று இடம்பெறவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள்; அவர்களுடன் இருந்தவர்களும் எழுந்தார்கள். அவர்கள் (தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள்; பிறகு ருகூஃ செய்தார்கள்; ருகூஃபை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தினார்கள்; பிறகு சஜ்தா செய்தார்கள்; சஜ்தாவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி அமர்ந்தார்கள்; அமர்வை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (மீண்டும்) சஜ்தா செய்தார்கள்; சஜ்தாவை நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி (இரண்டாம் ரக்அத்திற்கு) எழுந்தார்கள்.
முதல் ரக்அத்தில் செய்த நிற்றல், ருகூஃ, சஜ்தா மற்றும் அமர்வு போன்றவற்றைப்போலவே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். இரண்டாவது ரக்அத்தின் சஜ்தாவின் இறுதியில் அவர்கள் (துயரத்தால்) ஊதலானார்கள்; மேலும் அழுதார்கள். (அப்போது), "லம் தஇத்னீ ஹாதா வ அன ஃபீஹிம், லம் தஇத்னீ ஹாதா வ நஹ்னு நஸ்தக்ஃபிருக" (இறைவா! நான் அவர்களிடையே இருக்கும்போது நீ இவ்வாறு செய்வதாக எனக்கு வாக்களிக்கவில்லை; நாங்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரும்போது நீ இவ்வாறு செய்வதாக எனக்கு வாக்களிக்கவில்லை) என்று கூறியவாறு இருந்தார்கள்.
பிறகு அவர்கள் தமது தலையை உயர்த்தினார்கள்; சூரியன் (கிரகணத்திலிருந்து) விலகியிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து மக்களிடையே உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிய பிறகு அவர்கள் கூறியதாவது:
"நிச்சயமாக சூரியனும் சந்திரனும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். அவ்விரண்டில் ஒன்றுக்கு கிரகணம் ஏற்படுவதை நீங்கள் கண்டால், கண்ணியமிக்க அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்வதன் பக்கம் விரையுங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கம் எனக்கு மிக அருகில் கொண்டுவரப்பட்டது; எந்த அளவிற்கென்றால், நான் என் கையை நீட்டியிருந்தால் அதன் பழக்குலைகளைப் பறித்திருப்பேன். (அதேபோல்) நரகம் எனக்கு மிக அருகில் கொண்டு வரப்பட்டது; எந்த அளவிற்கென்றால், அது உங்களைச் சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நான் அதைத் தடுக்கலானேன்.
அதில் ஹிம்யர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்படுவதைக் கண்டேன். அவள் அப்பூனையைக் கட்டி வைத்திருந்தாள்; அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை (சுதந்திரமாக) விட்டுவிடவுமில்லை; அது இறக்கும் வரை (இப்படியே செய்தாள்). (நரகத்தில்) அவள் முன்னோக்கி வரும்போது அது அவளைக் கடித்துக் குதறுவதையும், அவள் திரும்பும்போது அது அவள் பின்புறத்தைக் கடித்துக் குதறுவதையும் நான் கண்டேன்.
மேலும், (நரகத்தில்) 'ஸிப்திய்யத்தைன்' (தோல் காலணிகள்) அணிந்திருந்த பனூ தஃதா குலத்தின் சகோதரர், இரு கிளைகளுள்ள தடியால் (நரக நெருப்பில்) தள்ளப்படுவதையும் நான் கண்டேன். மேலும், வளைந்த தடியை உடையவனையும் நான் (நரகத்தில்) கண்டேன். அவன் தனது வளைந்த தடியைக் கொண்டு ஹாஜிகளிடம் (யாத்ரீகர்களிடம்) திருடுபவனாக இருந்தான். அவன் நரகத்தில் தனது வளைந்த தடியின் மீது சாய்ந்துகொண்டு, 'நான்தான் வளைந்த தடியைக் கொண்டு திருடியவன்' என்று கூறிக்கொண்டிருந்தான்."