ஸப்ரா அல்-ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ‘முத்ஆ’ (தற்காலிகத்) திருமணத்திற்கு அனுமதி அளித்தார்கள். எனவே நானும் இன்னொரு மனிதரும் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள் நீண்ட கழுத்துடைய இளம் பெண் ஒட்டகத்தைப் போன்று (உயரமானவளாகவும், கம்பீரமானவளாகவும்) இருந்தாள். நாங்கள் அவளிடம் எங்களை(த் திருமணம் செய்துகொள்ள) முன்மொழிந்தோம். அப்போது அவள், “நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டாள். நான், “என்னுடைய மேலாடை” என்று சொன்னேன். என் தோழரும், “என்னுடைய மேலாடை” என்று சொன்னார். என் தோழருடைய மேலாடை என்னுடையதை விடத் தரமானதாக இருந்தது; நானோ அவரை விட இளையவனாக இருந்தேன். அவள் என் தோழருடைய மேலாடையைப் பார்க்கும் போது அது அவளுக்குப் பிடித்திருந்தது; என்னைப் பார்க்கும் போது நான் அவளுக்குப் பிடித்திருந்தேன். பிறகு அவள், “நீரும் உமது மேலாடையுமே எனக்குப் போதுமானவை” என்று கூறினாள். நான் அவளுடன் மூன்று (நாட்கள்) தங்கினேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடமேனும் இம்முறையில் (முத்ஆ) திருமணம் செய்யப்பட்ட பெண்கள் இருந்தால், அவர் அவளைச் செல்ல விட்டுவிடட்டும்” என்று கூறினார்கள்.