அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் எனது குலத்தாரான என் சிறிய தந்தைமார்களுக்கு 'ஃபதீக்' (பேரீச்சம் பானம்) ஊற்றிக் கொடுத்துக் கொண்டு நின்றிருந்தேன். அவர்களில் நானே வயதில் இளையவனாக இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, "நிச்சயமாக மதுபானம் தடை செய்யப்பட்டுவிட்டது" என்று கூறினார். அவர்கள், "அனஸே, அதை(க் கீழே) கொட்டிவிடுங்கள்" என்றார்கள். ஆகவே நான் அதை(க் கீழே) கொட்டிவிட்டேன்.
(அறிவிப்பாளர்) சுலைமான் (அத்தைமீ) கூறுகிறார்: நான் அனஸ் (ரழி) அவர்களிடம் "அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "செங்காயும், நன்கு கனிந்த பேரீச்சம்பழமும் (கலந்தது)" என்று கூறினார்கள். அபூபக்ர் பின் அனஸ் அவர்கள் கூறினார்கள்: "அது அக்காலத்தில் அவர்களுடைய மதுபானமாக இருந்தது."
சுலைமான் அவர்கள் கூறினார்கள்: "மற்றொரு மனிதரும் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடமிருந்து, அவர் (அனஸ்) அவ்வாறு கூறியதாக எனக்கு அறிவித்தார்."