حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَتَوْا عَلَى حَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ لُدِغَ سَيِّدُ أُولَئِكَ فَقَالُوا هَلْ مَعَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رَاقٍ فَقَالُوا إِنَّكُمْ لَمْ تَقْرُونَا، وَلاَ نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلاً. فَجَعَلُوا لَهُمْ قَطِيعًا مِنَ الشَّاءِ، فَجَعَلَ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ، وَيَجْمَعُ بُزَاقَهُ، وَيَتْفِلُ، فَبَرَأَ، فَأَتَوْا بِالشَّاءِ، فَقَالُوا لاَ نَأْخُذُهُ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ فَضَحِكَ وَقَالَ وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ، خُذُوهَا، وَاضْرِبُوا لِي بِسَهْمٍ .
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் அரபுக் கோத்திரங்களில் ஒன்றைச் சென்றடைந்தனர். அக்கோத்திரத்தார் இவர்களுக்கு விருந்தோம்பல் அளிக்கவில்லை. அந்நிலையில் அக்கோத்திரத்தின் தலைவன் (விஷப்பூச்சியால்) தீண்டப்பட்டான்.
அவர்கள் (நபித்தோழர்களிடம்), "உங்களிடம் மருந்து ஏதேனும் உள்ளதா? அல்லது மந்திரிப்பவர் (ராகி) யாரேனும் இருக்கிறார்களா?" என்று கேட்டனர்.
அதற்கு (நபித்தோழர்கள்), "நீங்கள் எங்களுக்கு விருந்தோம்பல் அளிக்கவில்லை. எனவே, எங்களுக்கு ஒரு கூலியை நிர்ணயிக்காத வரை நாங்கள் (சிகிச்சை) செய்யமாட்டோம்" என்று கூறினர்.
ஆகவே, அவர்கள் இவர்களுக்கு ஓர் ஆட்டு மந்தையை(த் தருவதாக) ஒப்புக்கொண்டார்கள். (நபித்தோழர்களில்) ஒருவர் ‘உம்முல் குர்ஆன்’ (சூரத்துல் ஃபாத்திஹா) ஓதி, உமிழ்நீரைச் சேகரித்து (காயத்தில்) துப்பினார். அவர் குணமடைந்தார்.
அவர்கள் ஆடுகளைக் கொண்டு வந்தனர். ஆனால் நபித்தோழர்கள், "நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்காமல் இதை எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினர்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டபோது, அவர்கள் சிரித்துவிட்டு, "அது ஒரு ருக்யா (மந்திரிப்பு) என்று உமக்கு எப்படித் தெரியும்? அதை எடுத்துக்கொள்ளுங்கள்; அதில் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்கினோம். அப்போது ஒரு பெண்மணி எங்களிடம் வந்து, “எங்கள் குலத்தலைவர் (தேள்) தீண்டப்பட்டு (பாதிக்கப்பட்டு) இருந்தார். உங்களில் ஓதிப்பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா?” என்று கேட்டார். எங்களில் ஒருவர் அவருடன் (எழுந்து) சென்றார். அவர் (அவ்வாறு) நன்றாக ஓதிப்பார்ப்பார் என்று நாங்கள் எண்ணியிருக்கவில்லை. அவர் (அந்தத் தலைவருக்கு) ‘ஃபாத்திஹத்துல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதிப்பார்த்தார். அவர் குணமடைந்தார். அவர்கள் அவருக்கு ஓர் ஆட்டு மந்தையைக் கொடுத்தார்கள்; எங்களுக்குப் பருகப் பாலும் கொடுத்தார்கள்.
நாங்கள் (அவரிடம்), “உமக்கு (நன்றாக) ஓதிப்பார்க்கத் தெரியுமா?” என்று கேட்டோம். அதற்கவர், “நான் ‘ஃபாத்திஹத்துல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) கொண்டே தவிர (வேறு எதனையும் கொண்டு) அவருக்கு ஓதிப்பார்க்கவில்லை” என்று கூறினார்.
நான், “அதை (ஆடுகளை) நாம் நபி (ஸல்) அவர்களிடம் வரும் வரை (பங்கிடவோ, பயன்படுத்தவோ) செய்யாதீர்கள்” என்று சொன்னேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இச்செய்தியை அவர்களிடம் கூறினோம். அதற்கு அவர்கள், “அது (குணமளிக்கக்கூடிய) ஓதல் (ருக்யா) என்று அவருக்கு எப்படித் தெரியும்? (அந்த ஆடுகளைப்) பங்கிடுங்கள்; உங்களுடன் சேர்த்து எனக்கும் அதில் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று கூறினார்கள்.