குராஸான் வாசிகளில் ஒருவர் (என்னிடம்), "அபூ அம்ரு அவர்களே! எங்களில் குராஸான் பகுதியைச் சேர்ந்தவர்கள், 'ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பிறகு அவளையே திருமணம் முடித்துக்கொண்டால், அவர் (அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட) பலி ஒட்டகத்தின் மீது சவாரி செய்பவரைப் போன்றவர்' என்று கூறுகிறார்களே (அது சரியா)?" என்று கேட்டார்.
அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ புர்தா இப்னு அபீ மூஸா அவர்கள் தம் தந்தை (அபூ மூஸா அல்-அஷ்அரீ ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேருக்கு இரண்டு முறை கூலி வழங்கப்படும். (முதலாவது) வேதக்காரர்களில் ஒருவர்; அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் காலத்தையும் அடைந்து, அவர்களை நம்பி, அவர்களைப் பின்பற்றி, அவர்களை உண்மைப்படுத்தினார். அவருக்கு இரு கூலிகள் உண்டு. (இரண்டாவது) அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் ஓர் அடிமை. அவருக்கும் இரு கூலிகள் உண்டு. (மூன்றாவது) ஒரு மனிதர்; அவரிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவர் அவளுக்கு உணவளித்து, அந்த உணவை (வளர்ப்பை) அழகாக்கி, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அந்த ஒழுக்கத்தையும் அழகாக்கி, பிறகு அவளை விடுதலை செய்து, அவளையே மணந்துகொண்டார். அவருக்கும் இரு கூலிகள் உண்டு."
பிறகு ஷஅபீ (ரஹ்) அவர்கள் அந்த (குராஸான்) மனிதரிடம், "எந்தக் கட்டணமுமின்றி இந்த ஹதீஸை நீர் எடுத்துக்கொள்வீராக! (இதற்கு முன்) இதைவிடச் சிறிய ஹதீஸுக்காகவும் மதீனா வரை பயணம் மேற்கொள்ளப்படுவதுண்டு" என்று கூறினார்கள்.
அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மூன்று பேருக்கு இரட்டிப்புக் கூலி வழங்கப்படும்: (அவர்கள் யாவரெனில்,)
1. ஒருவர் தன்னிடம் உள்ள அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதைச் செம்மையாகக் கற்பித்து, கல்வி கற்றுக்கொடுத்து, அதைச் செம்மையாகக் கற்றுக்கொடுத்து, பின்னர் அவளை விடுதலை செய்து, அவளை மணந்து கொள்கிறார்.
2. ஓர் அடிமை, அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தன் எஜமானர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுகிறார்.
3. மேலும், வேதக்காரர்களில் ஒரு விசுவாசி (யார் தமது நபி மீது நம்பிக்கை கொண்டு, பின்னர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்).'