நபி (ஸல்) அவர்கள் என் தந்தையாரையும் (அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்களையும்) முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களையும் யமனுக்கு அனுப்பி (அவர்களிடம்) கூறினார்கள், "மக்களுக்கு இலகுபடுத்துங்கள், அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள், அவர்களை வெறுப்படையச் செய்யாதீர்கள் (அதாவது நற்செயல்களை மக்கள் வெறுக்கும்படி செய்யாதீர்கள்), நீங்கள் இருவரும் ஒத்துழைப்புடனும் பரஸ்பர புரிதலுடனும் செயல்படுங்கள்." அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், "எங்கள் நாட்டில் அல்-பித்உ எனப்படும் ஒரு விதமான மதுபானம் (குடிப்பதற்காகத்) தயாரிக்கப்படுகிறது." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வொரு போதை தரும் பொருளும் ஹராம் (தடுக்கப்பட்டது)."
நபி (ஸல்) அவர்கள் என்னையும், முஆத் (ரழி) அவர்களையும் யமனுக்கு அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இருவரிடமும், "(மக்களுக்கு) நற்செய்தி கூறுங்கள்; (விஷயங்களை) இலகுபடுத்துங்கள்; (மார்க்கத்தைக்) கற்றுக் கொடுங்கள்; (மக்களை) வெறுப்படையச் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். மேலும், "ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள்" என்றும் அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.
(நாங்கள் புறப்படுவதற்காகத்) திரும்பியபோது, அபூ மூஸா (ரழி) அவர்கள் (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அ(ம்மக்க)ளிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் உள்ளது; அது கெட்டிப்படும் வரை காய்ச்சப்படுகிறது. மேலும், வாற்கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் 'மிஸ்ர்' எனும் பானமும் உள்ளது (இவற்றின் சட்டம் என்ன?)" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொழுகையிலிருந்து (உங்களைத்) தடுக்கும் போதைதரும் ஒவ்வொரு பொருளும் ஹராம் (விலக்கப்பட்டதாகும்)" என்று கூறினார்கள்.