ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஆலியா’ பகுதியிலிருந்து (வந்து) கடைவீதிக்குள் நுழைந்து சென்றார்கள். மக்கள் அவர்களின் இரு மருங்கிலும் (அவர்களைச் சூழ்ந்து) இருந்தனர். அப்போது சிறிய காதுகளையுடைய ஒரு செத்த ஆட்டுக்குட்டியைக் கடந்து சென்றார்கள். அதன் காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு திர்ஹத்திற்குப் பெற்றுக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "எதைக் கொடுத்தும் இதனைப் பெற நாங்கள் விரும்பவில்லை; இதை வைத்து நாங்கள் என்ன செய்வது?" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், "இது உங்களுக்கு (இலவசமாகவே) கிடைப்பதை விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது உயிருடன் இருந்திருந்தாலும், சிறிய காதுகளையுடையது என்பது இதில் உள்ள குறையாகும். அவ்வாறிருக்க இது செத்ததாக இருக்கும் நிலையில் (எப்படி விரும்புவோம்)?" என்று கூறினார்கள்.
அப்பொழுது அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு இந்த (செத்த குட்டி) எவ்வளவு அற்பமானதோ, அதைவிட உலகம் அல்லாஹ்விடத்தில் மிக அற்பமானதாகும்" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆலியா' பகுதியிலிருந்து (மதீனாவிற்குள்) நுழையும்போது சந்தையைக் கடந்து சென்றார்கள். மக்கள் அவரை இருபுறமும் சூழ்ந்து சென்றனர். வழியில், காதுகள் சிறுத்த செத்துக்கிடந்த ஓர் ஆட்டுக்குட்டியை அவர்கள் கண்டார்கள். அவர் அதன் காதைப் பிடித்தார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் இதை எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? அறிவிப்பாளர் இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்தார்.