ஹம்ஸா பின் அல்-முகீரா பின் ஷுஃபா அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) பின்தங்கினார்கள்; நானும் அவர்களுடன் தங்கினேன். அவர்கள் தம் தேவையை முடித்ததும், 'உன்னிடம் தண்ணீர் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன். அவர்கள் தம் இரு கைகளையும், முகத்தையும் கழுவினார்கள். பிறகு, தம் முன்னங்கைகளை வெளிப்படுத்த முயன்றார்கள்; ஆனால் அவர்களுடைய ஜுப்பாவின் கைச்சட்டைகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. எனவே, (கைகளை வெளியே எடுத்து) ஜுப்பாவைத் தம் தோள்கள் மீது போட்டுக் கொண்டு, தம் முன்னங்கைகளைக் கழுவினார்கள். (பிறகு) தம் முன் தலை (முடி) மீதும், தலைப்பாகை (இமாமா) மீதும், தம் காலுறைகள் (குஃப்) மீதும் மஸஹ் செய்தார்கள்."