நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் நடமாட்டத்திலிருந்து மறைக்கும் எதனையாவது (ஸுத்ராவை) முன்னோக்கித் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது பனூ அபீ முஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அவருக்கு முன்பாகக் கடந்து செல்ல விரும்பினார். அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் (கையை வைத்து) தடுத்தார்கள். அந்த இளைஞர் (செல்ல வேறு வழியுண்டா எனப்) பார்த்தார்; அவருக்கு முன்பாகத் தவிர வேறு செல்வழி எதுவும் அவருக்குத் தென்படவில்லை. எனவே மீண்டும் (அவர் முன்பே) கடக்க முயன்றார். அபூ ஸயீத் (ரலி) அவர்கள் முதல் முறையை விடக் கடுமையாக அவரைத் தடுத்தார்கள்.
அந்த இளைஞர் அபூ ஸயீத் (ரலி) அவர்களைக் குறைகூறிவிட்டு, மர்வான் என்பவரிடம் சென்று, அபூ ஸயீத் (ரலி) அவர்களால் தமக்கு நேர்ந்ததை முறையிட்டார். அபூ ஸயீத் (ரலி) அவர்களும் அந்த இளைஞரைப் பின்தொடர்ந்து மர்வானிடம் சென்றார்கள். மர்வான், "அபூ ஸயீத் அவர்களே! உமக்கும் உம் சகோதரரின் மகனுக்கும் இடையில் என்ன நடந்தது?" என்று கேட்டார்.
அதற்கு அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டுள்ளேன்:
"உங்களில் ஒருவர் தம்மையும் மக்களையும் பிரிக்கும் ஒரு தடுப்பை (ஸுத்ராவை) முன்னோக்கித் தொழுது கொண்டிருக்கும்போது, அவருக்கு முன்னால் யாரேனும் கடக்க முயன்றால் அவரைத் தடுக்கட்டும். அவர் (விலக) மறுத்தால் அவருடன் சண்டையிடட்டும்! ஏனெனில், நிச்சயமாக அவன் ஒரு ஷைத்தான்."
அபூ ஸாலிஹ் கூறினார்கள்: நான் அபூ ஸயீத் (ரழி) அவர்களிடம் கண்டதையும், கேட்டதையும் அறிவிக்கிறேன். அபூ ஸயீத் (ரழி) அவர்கள் மர்வான் அவர்களிடம் சென்று கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: உங்களில் ஒருவர், மக்களை விட்டும் தம்மை மறைக்கும் ஏதேனும் ஒரு பொருளை (ஸுத்ராவை) முன்னோக்கித் தொழுது கொண்டிருக்கும் போது, யாரேனும் அவருக்கு முன்னால் கடந்து செல்ல விரும்பினால், அவர் அவனது கழுத்து அல்லது நெஞ்சில் தள்ளட்டும்; அவன் (விலகிச் செல்ல) மறுத்தால், அவனைத் தடுக்கப் போராடட்டும் (அதாவது, பலவந்தமாகத் தடுக்கட்டும்); அவன் ஒரு ஷைத்தான் தான் (ஷைத்தானின் செயலைச் செய்பவன்).