அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் வானத்தில் ஏதேனும் ஒரு கட்டளையைப் பிறப்பித்தால், அவனுடைய சொல்லுக்குப் பணிந்து வானவர்கள் தங்கள் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அதன் ஓசை) வழுவழுப்பான பாறையின் மீது சங்கிலியை (இழுப்பதால் ஏற்படும் ஓசையைப்) போன்று இருக்கும். (அந்தக் கட்டளை அல்லது ஓசை) அவர்களை ஊடுருவிச் செல்லும்.
அவர்களின் இதயங்களிலிருந்து அச்சம் நீக்கப்படும்போது, ‘உங்கள் இறைவன் என்ன சொன்னான்?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘(அவன்) உண்மையையே கூறினான். மேலும் அவன் மிக உயர்ந்தவன்; மிகப் பெரியவன்’ என்று பதிலளிப்பார்கள்."