ஹன்ளலா இப்னு கைஸ் அல்-அன்சாரி அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளியைக் (வாடகையாகக்) கொண்டு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அதில் எந்தத் தீங்கும் இல்லை" என்று கூறினார்கள்.
(மேலும் அவர்கள் கூறினார்கள்:) "நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் (நிலத்தின்) வாய்க்கால் ஓரங்கள், ஓடைகளின் முனைகள் மற்றும் (வயலின்) குறிப்பிட்ட சில பகுதிகளில் (விளையும்) பயிர்களைக் (குத்தகையாகக்) கொண்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தனர். அப்போது (குத்தகைக்கு விடப்பட்ட) இப்பகுதி அழிந்துவிடும்; மற்றது தப்பித்துவிடும் (விளையும்). (அல்லது) மற்றது தப்பித்துவிடும்; இப்பகுதி அழிந்துவிடும். மக்களிடத்தில் இத்தகைய (நிச்சயமற்ற) குத்தகை முறையைத் தவிர வேறு முறை இருக்கவில்லை. அதனால்தான் அ(ந்த முறையான)து தடை செய்யப்பட்டது. ஆனால், (அளவு) அறியப்பட்டதும் உத்தரவாதமுள்ளதுமான ஒன்றைக் (குத்தகையாகக் கொண்டு நிலத்தை விடுவதில்) எந்தத் தீங்கும் இல்லை."