அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
குரைழா (கோத்திரத்தின்) மக்கள் ஸஅத் (ரழி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள். (இதன் காரணமாக) நபி (ஸல்) அவர்கள் அவருக்காக (ஸஅத் (ரழி) அவர்களை அழைத்து வர) ஆளனுப்பினார்கள்; அவரும் வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்த ஸஹாபாக்களிடம்), "உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்" என்றார்கள். அல்லது (அவர்கள்) "உங்களில் சிறந்தவருக்காக (எழுந்து நில்லுங்கள்)" என்று கூறினார்கள். ஸஅத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அருகில் அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), "இந்த மக்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்" என்று கூறினார்கள். ஸஅத் (ரழி) அவர்கள், "ஆகவே, அவர்களின் போர்வீரர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும், அவர்களின் பெண்களும் குழந்தைகளும் கைதிகளாகப் பிடிக்கப்பட வேண்டும் என்றும் நான் தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பின்படி தீர்ப்பளித்துள்ளீர்கள்" என்று கூறினார்கள்.