பக்கம் - 102 -
ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலன் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்த துணிவின்றி மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போதும் அந்த அக்கிரமக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவே தொழுது வந்தார்கள். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து வந்தார்கள். இதை யாராலும் தடுக்க முடியவில்லை. எந்த ஒன்றும் நபி (ஸல்) அவர்களை இப்பணியிலிருந்து திருப்பி விடவும் முடியவில்லை. ஏனெனில், அல்லாஹ் அவர்களுக்கு,

ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு தெளிவாக அறிவித்து விடுங்கள். மேலும், இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 15:94)

என்று கட்டளையிட்டிருந்தான்.

ஆகவே, இணைவைப்பவர்கள் நாடும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு இடையூறு அளித்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இயற்கையாக இருந்த பயமும் அபூதாலிப் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்து வந்த பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றால் வெளிப்படையாக நபி (ஸல்) அவர்களை இம்சிக்க அவர்களால் முடியவில்லை. மேலும், ஹாஷிம் கிளையார்கள் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பயந்தனர்.

ஆனால், நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி இணைவைப்போரின் மத தலைமைத்துவத்தையும் சிலை வணக்கக் கலாச்சாரத்தையும் தவிடுபொடியாக்கியது. இதன் காரணத்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையூறுகள் பல செய்யத் தொடங்கினர்.

இக்காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றிள் ஒன்று:

1) அபூலஹபின் மகன் உதைபா நபி (ஸல்) அவர்களிடம் வந்து அத்தியாயம் அந்நஜ்மை ஓதிக் காண்பித்து “இதை நான் மறுக்கிறேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்து அவர்களது சட்டையைக் கிழித்து அவர்களது முகத்தில் எச்சிலை துப்பினான். ஆனால், எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது விழவில்லை. அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! உனது மிருகங்களிலிருந்து ஒரு மிருகத்தை அவன் மீது சாட்டுவாயாக!” என்று அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களின் இந்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். இச்சம்பவத்திற்கு பிறகு உதைபா குறைஷியர்கள் சிலருடன் மக்காவிலிருந்து பயணமானான். ஷாம் நாட்டின் “ஜர்க்கா’ என்ற இடத்தில் தங்கியபோது அன்றிரவு ஒரு சிங்கம் அவர்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது உதைபா “எனது சகோதரனின் நாசமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹம்மது எனக்கு எதிராக வேண்டிக் கொண்டதுபோல் இந்த சிங்கம் என்னைத் தின்றே முடிக்கும். நானோ ஷாமில் இருக்கின்றேன். அவர் மக்காவில் இருந்து கொண்டே என்னைக் கொன்றுவிட்டார்” என்று கூச்சலிட்டான். பிறகு அவனை தங்களுக்கு நடுவில் ஆக்கிக்கொண்டு மற்றவர்கள் அவனைச் சுற்றி தூங்கினார்கள். ஆனால், இரவில் அந்த சிங்கம் அவர்களைத் தாண்டிச் சென்று உதைபாவின் கழுத்தை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. (தலாயிலுந்நுபுவ்வா)