பக்கம் - 131 -
4) மறுமையின் மீது நம்பிக்கை

மறுமையின் மீதுண்டான நம்பிக்கை, மேன்மேலும் கடமை உணர்வை பலப்படுத்தியது. அகிலத்தைப் படைத்து, வளர்த்து, காக்கும் இறைவனுக்கு முன்னால் நிற்க வேண்டும்; சிறிய பெரியஒவ்வொரு செயல்களுக்கும் அவனிடத்தில் விசாரணை உண்டு; அதற்குப் பின் நிரந்தர இன்பம் அல்லது நிரந்தர வேதனை நிச்சயம் உண்டு. இவ்வாறு உறுதியான நம்பிக்கையை நபித்தோழர்கள் கொண்டிருந்தனர். தங்களின் வாழ்க்கையை அச்சத்திலும் ஆதரவிலும் கழித்தனர். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைப்பதுடன், அவனது வேதனையைப் பயந்தும் வந்தனர். அடுத்து வரும் வசனம் இதையே சுட்டிக்காட்டுகிறது.

அவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுக்கின்றனர். அத்துடன், நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதை அவர்களது உள்ளங்கள் பயப்படுகின்றன... (அல்குர்ஆன் 23:60)

இவ்வுலகம், அதிலுள்ள இன்ப துன்பங்கள் யாவும் மறுமைக்கு முன் கொசுவின் இறக்கை அளவுக்குக் கூட சமமாகாது என்பதை நபித்தோழர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தனர். இதனால்தான் உலகத்தின் கஷ்டங்களும் சிரமங்களும் எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும் அதை அறவே பொருட்படுத்தாமல் துச்சமாக மதித்தனர்.

5) அல்குர்ஆன்

முஸ்லிம்கள் எந்த அடிப்படைக்கு மக்களை அழைக்கின்றார்களோ அந்த அடிப்படை, உண்மைதான் என்பதை குர்ஆன் வசனங்கள் தக்க சான்றுகளாலும், தெளிவான எடுத்துக் காட்டுகளாலும் மெய்ப்பித்துக் காட்டின. மேலும், மிக உயர்ந்த மனித சமூகமான இஸ்லாமிய சமூகம் அமைய வேண்டிய அடிப்படைகளை மேன்மைமிகு குர்ஆன் சுட்டிக்காட்டியது. இதில் நேரிடும் இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகள் தலைதூக்கும் போது துணிவுடன் இருக்க வேண்டும்; என்பதை முன் சென்ற சமுதாயங்களை எடுத்துக்காட்டாக தந்து அவர்களை பற்றிய செய்திகளில் நல்ல படிப்பினைகளையும் ஞானங்களையும் வழங்கியது.

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)” என்று கேட்டதற்கு “அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது” என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2:214)